மும்பை : இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி தனது செயலுக்காக 3 ஆண்டுகளுக்கு பின் தென்னாப்பிரிக்கா முன்னாள் கேப்டன் டீன் எல்கரிடம் மன்னிப்பு கோரிய சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருடன் தென்னாப்பிரிக்கா அணியின் முன்னாள் கேப்டன் டீன் எல்கர், சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தார். தென்னாப்பிரிக்கா அணிக்காக 86 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள டீன் எல்கர், 14 சதங்கள் மற்றும் 23 அரைசதங்கள் உட்பட 5347 ரன்களை விளாசியுள்ளார். இந்திய மண்ணில் சிறப்பாக ஆடிய வெகுசில தென்னாப்பிரிக்கா பேட்ஸ்மேன்களில் இவரும் ஒருவர்.

இந்த நிலையில் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்த அவர், விராட் கோலி நேரடியாக மன்னிப்பு கோரிய சம்பவம் குறித்து பேசியுள்ளார். அதில், 2015ஆம் ஆண்டு நவம்பரில் தென்னாப்பிரிக்கா அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் செய்தது. அப்போது அஸ்வின் மற்றும் ஜடேஜா இருவருக்கும் எதிராக நான் பேட்டிங் செய்து கொண்டிருந்தேன்.
அப்போது இந்திய அணியின் கேப்டனாக இருந்த விராட் கோலி, எனக்கு எதிராக கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தி வம்புக்கு இழுத்தார். இதனால் எனக்கும் கோபம் வந்தது. அப்போது நானும் அவருக்கு எதிராக காட்டமான வார்த்தைகளை வெளிப்படுத்தினேன். எனது பேட்டால் அடித்துவிடுவேன் என்று கூறினேன். அதன்பின் ஆர்சிபி அணியில் இருந்த டீ வில்லியர்ஸ் வந்து விராட் கோலியிடம் கேள்விகளை கேட்டார்.
ஆனால் 2018ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவுக்கு விராட் கோலி தலைமையிலான இந்திய அணி சுற்றுப்பயணம் செய்தது. அப்போது என்னிடம் வந்து, இந்த டெஸ்ட் தொடர் முடிவடைந்த பின் இருவரும் ஒன்றாக அமர்ந்து குடிக்கலாமா? என்று கேட்டார். இந்தியாவில் நான் உங்களிடம் நடந்து கொண்ட விதத்திற்காக மன்னிப்பு கேட்க விரும்புகிறேன் என்றார். இது ஆச்சரியமாக இருந்தது.
அதனை தொடர்ந்து டெஸ்ட் தொடருக்கு பின் நாங்கள் இருவரும் சந்தித்தோம். அப்போது அதிகாலை 3 மணி வரை குடித்து கொண்டு பேசினோம் என்று தெரிவித்தார். அண்மையில் டீன் எல்கர் ஓய்வு பெற்ற போது, டீன் எல்கரை களத்திலேயே கட்டியணைத்து பாராட்டி வழியனுப்பி வைத்தார். இது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.