மும்பை: இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் முகமது சிராஜின் டயட் என்னவென்று கேட்டு சொல்லுமாறு இங்கிலாந்து முன்னாள் கேப்டன் டேவிட் கோவர் கூறியுள்ளார். சிராஜின் டயட்டை கொடுத்து இங்கிலாந்து வீரர்களை பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்துவேன் என்று கூறிய அவர், ஒவ்வொரு இன்னிங்ஸிலும் 30 ஓவர்களை சிராஜ் வீசியது பிரமிக்க வைத்திருப்பதாக கூறி இருக்கிறார்.
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் 2-2 என்ற கணக்கில் சமனில் முடிவடைந்தது. இதன் மூலமாக சச்சின் டெண்டுல்கர், - ஆண்டர்சன் டிராபியை இந்திய அணி தக்க வைத்துக் கொண்டது. இந்த டெஸ்ட் தொடரில் முகமது சிராஜின் பவுலிங் பலரையும் வியக்க வைத்தது. 5 போட்டிகளில் விளையாடி 23 விக்கெட்டுகளை முகமது சிராஜ் கைப்பற்றினார்.

23 விக்கெட்டுகளை விடவும் முகமது சிராஜின் ஃபிட்னஸ் பலரையும் மிரள வைத்தது. 5வது டெஸ்ட் போட்டியின் கடைசி நாளிலும் கூட முகமது சிராஜ் 140 கிமீ வேகத்தில் பவுலிங் செய்தது இங்கிலாந்து பேட்ஸ்மேன்களையும் ஆச்சரியம் கொள்ள வைத்தது. இந்த டெஸ்ட் தொடரில் சிராஜை தவிர்த்து வேறு எந்த பவுலரும் 5 போட்டிகளிலும் முழுமையாக விளையாடவில்லை. மொத்தமாக 185 ஓவர்களை சிராஜ் வீசி இருக்கிறார்.
இதனால் இங்கிலாந்து மண்ணில் சிராஜ்-க்கு புதிய ரசிகர் பட்டாளமே உருவாகி இருக்கிறது. தி ஹன்டரட் தொடர் தொடங்கிய போதும், முகமது சிராஜ் பற்றிய பேச்சுகள் இதுவரை ஓயவில்லை. இதுகுறித்து இங்கிலாந்து முன்னாள் கேப்டன் டேவிட் கோவர் பேசுகையில், முகமது சிராஜின் உணவு பழக்கங்களை தெரிந்து கொள்ள விரும்புகிறேன். அவர் என்ன சாப்பிடுகிறார், என்ன டயட் பின்பற்றுகிறார், என்ன மாதிரியான ஜூஸ் குடிக்கிறார் என்று தெரிந்து கொள்ள நினைக்கிறேன்.
அவையனைத்தையும் அப்படியே இங்கிலாந்து பவுலர்களுக்கு கொடுக்க வேண்டும். சிராஜை பற்றி நினைக்கும் போதெல்லாம், அவர் தொடர்ச்சியாக 5 டெஸ்ட் போட்டிகளிலும் ஆடியது மட்டுமே நினைவுக்கு வருகிறது. அதிலும் ஓவல் டெஸ்ட் போட்டியின் 2வது இன்னிங்ஸில் சுமார் 30 ஓவர்களை வீசிவிட்டார். அந்த பிட்சில் வேகப்பந்துவீச்சாளர்களுக்கு மட்டுமே உதவி கிடைக்கும்.
ஆனால் சிராஜ் கொஞ்சம் கூட ஓய்வு எடுக்கவில்லை. கொஞ்சம் கூட நம்பிக்கையையும் கைவிடவில்லை. சிறந்த ஃபிட்னஸ் மற்றும் வாழ்வா சாவா என்று பார்த்துவிடலாம் என்ற போராட்டத்திற்கு சிராஜின் ஆட்டம் சிறந்த எடுத்துக்காட்டாகும். கடந்த சில ஆண்டுகளாகவே இங்கிலாந்து அணியின் பவுலர்கள் தொடர்ச்சியாக காயம் அடைந்து வருகிறார்கள்.
அவர்களை முழு ஃபிட்னஸ் உடன் வைப்பது கடினமாக இருக்கிறது. ஒரே பவுலிங் அட்டாக்கை மொத்த டெஸ்ட் தொடரிலும் பார்ப்பதே ஆச்சரியமாக உள்ளது. ஆனால் இங்கு ஒரு மனிதன் வந்து 5 டெஸ்ட் போட்டிகளிலும் விளையாடியதோடு, கடைசி போட்டியின் கடைசி இன்னிங்ஸில் 30 ஓவர்களை வீசி சென்றிருக்கிறான்.. நினைத்தால் ஆச்சரியமாக உள்ளது என்று தெரிவித்துள்ளார்.