மும்பை: இந்தியா வரும் இங்கிலாந்து அணியுடன் பயிற்சி போட்டியில் ஆடவுள்ள இந்திய ஏ அணியில் தமிழக வீரர்களான சாய் சுதர்சன் மற்றும் பிரதோஷ் ரஞ்சன் பால் இருவரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இந்தியாவுக்கு சுற்றுப்பயனம் மேற்கொள்ளும் இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கவுள்ளது. ஜனவரி 25ஆம் தேதி முதல் டெஸ்ட் போட்டியும், பிப்.2ஆம் தேதி 2வது டெஸ்ட் போட்டியும், பிப்.15ஆம் தேதி 3வது டெஸ்ட் போட்டியும், பிப்.23ஆம் தேதி 4வது டெஸ்ட் போட்டியும், மார்ச்.7ஆம் தேதி 5வது டெஸ்ட் போட்டியும் நடக்கவுள்ளது.

அதற்கு முன்பாக இந்தியாவுக்கு வரும் இங்கிலாந்து இரண்டு பயிற்சி போட்டிகளில் விளையாடவுள்ளது. இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிராக 2 நாட்கள் கொண்ட பயிற்சி போட்டியும், பின்னர் 4 நாட்கள் கொண்ட பயிற்சி போட்டியிலும் இந்திய ஏ அணி பங்கேற்கவுள்ளது. இந்த நிலையில் இந்திய ஏ அணியில் இடம்பிடித்துள்ள 12 பேர் கொண்ட அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
அண்மையில் தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணத்தில் இடம்பிடித்த வீரர்கள் பலரும் இடம்பிடித்துள்ளனர். குறிப்பாக தென்னாப்பிரிக்கா ஏ அணிக்கு எதிராக சிறப்பாக ஆடிய தமிழ்நாடு வீரர் பிரதோஷ் ரஞ்சன் பால் மற்றும் சாய் சுதர்சன் இருவரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அதேபோல் கேப்டனாக அபிமன்யூ ஈஸ்வரன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அதேபோல் ரஜத் பட்டிதார், இளம் வீரர் சர்ஃபராஸ் கான் ஆகியோரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
அதுமட்டுமல்லாமல் விக்கெட் கீப்பராக துருவ் ஜுரெல், கேஎஸ் பரத், மானவ் சுதர், புல்கித் நரங், நவ்தீப் சைனி, துஷார் தேஷ்பாண்டே, வித்வாத் காவேரப்பா, ஆகாஷ் தீப் உள்ளிட்டோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மேலும் 2 நாட்கள் கொண்ட முதல் பயிற்சி போட்டி ஜனவரி 12 மற்றும் ஜனவரி 13 ஆகிய தேதிகளில் நடக்கவுள்ளது. அதேபோல் 4 நாட்கள் கொண்ட பயிற்சி போட்டி ஜனவரி 17 முதல் ஜனவரி 20 ஆகிய தேதிகளில் நடக்கவுள்ளது.
ஏற்கனவே ரஞ்சி டிராபி போட்டிகள் நடந்து வரும் நிலையில், இந்திய ஏ அணியும் இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிரான பயிற்சி போட்டிகளில் பங்கேற்கவுள்ளது. இந்த 2 பயிற்சி போட்டிகளில் விளையாடும் வீரர்களில் சிலர் பேக் அப் வீரர்களாக தேர்வு செய்யப்பட வாய்ப்புகள் இருப்பதாக பார்க்கப்படுகிறது.