மான்செஸ்டர்: இந்திய அணியின் உதவி பயிற்சியாளர் ரியான் டென் டோச்சேட், வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜின் பணிச்சுமையை நிர்வகிப்பதின் முக்கியத்துவத்தை வலியுறுத்தியுள்ளார். கடந்த இரண்டு ஆண்டுகளாக சிராஜ் விளையாடிய கிரிக்கெட்டின் அளவைக் கருத்தில் கொண்டு இந்தக் கருத்தை அவர் தெரிவித்தார்.
சர்வதேச கிரிக்கெட்டின் அதிகரித்து வரும் தேவைகளால், பணிச்சுமை மேலாண்மை குறித்த விவாதம் முக்கியமான தலைப்பாக மாறியுள்ளது.இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கு முன்னர், இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர், முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரீத் பும்ரா ஐந்து டெஸ்ட் போட்டிகளில் மூன்றில் மட்டுமே விளையாடுவார் என்று அறிவித்திருந்தார்.

இந்தத் திட்டத்தின்படி, பும்ரா எட்ஜ்பாஸ்டன் டெஸ்ட் போட்டியில் ஓய்வு பெற்றார். மேலும் தொடரின் இறுதி போட்டியையும் அவர் தவறவிட வாய்ப்புள்ளது. இந்த சூழலில், சிராஜின் அயராத ஆற்றலையும், அர்ப்பணிப்பையும் பாராட்டிய டென் டோச்சேட், அவரது மன உறுதியை சிங்கத்துடன் ஒப்பிட்டார்.
"லார்ட்ஸ் டெஸ்டில் ஐந்தாவது நாளில் ஸ்டோக்ஸ் செய்ததைப் போல, கூடுதல் ஓவர்களை வீசுவதற்கு எப்போதும் தயாராக இருக்கும் முகமது சிராஜின் பணிச்சுமையை மேலாண்மை செய்வது மிகவும் முக்கியம்," என்று டென் டோச்சேட் தெரிவித்தார்.
"அவரைப் போன்ற ஒரு வீரர் நம்மிடம் இருப்பது எவ்வளவு பாக்கியம் என்பதை நாம் எளிதாக எடுத்துக்கொள்கிறோம். ஒரு வேகப்பந்து வீச்சாளரிடமிருந்து எதிர்பார்க்கப்படும் முடிவுகளை அவர் எப்போதும் தராவிட்டாலும், அவரது மன உறுதி சிங்கத்தைப் போன்றது. பந்து அவர் கையில் இருக்கும்போது, எப்போதும் ஏதோ ஒரு மாற்றம் நிகழப் போகிறது என்ற உணர்வை அவர் தருகிறார்" என்று டோச்சேட் கூறினார்.
இதே போன்று கடைசி இரண்டு டெஸ்ட் போட்டிகளில் ஒரு போட்டியில் பும்ரா விளையாடுவார் என்பது எங்களுக்கு தெரியும். மான்செஸ்டரில் தொடர் இப்போது முக்கியமான கட்டத்தில் உள்ளதால், அவரை விளையாட வைப்பதற்கு முன்னுரிமை அளிக்கப்படும்," என்று டென் டோச்சேட் கூறினார்.
டென்டோசட்டின் இந்தப் பேட்டியின் மூலம் பும்ரா 4வது டெஸ்டில் விளையாடுவது உறுதியாகி உள்ளது. ஆனால் சிராஜ் விளையாடுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. எனினும் 3வது மற்றும் 4வது டெஸ்ட்க்கு இடையே 8 நாட்கள் ஓய்வு இருப்பது, வீரர்களுக்கு ஒரு நல்ல விசயமாக பார்க்கப்படுகிறது.