மும்பை : இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற இருக்கிறது. இந்த போட்டிக்காக இந்திய அணி வீரர்கள் தீவிர வலை பயிற்சியில் ஈடுபட்டனர். சி எஸ் கே பாணியில் இந்திய அணி வீரர்கள் பயிற்சி செய்வதை ஒடிசா மக்கள் கண்டு கணிக்க, இலவச அனுமதி வழங்கப்பட்டது.
இதனை அடுத்து சுமார் 10,000 மேற்பட்ட ரசிகர்கள் மைதானத்திற்கு முன்பு திரண்டு இந்திய வீரர்கள் பயிற்சி செய்ததை கண்டு களித்தனர். இந்த நிலையில் செய்தியாளிடம் பேசிய இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளர் சித்தான்சோ கோட்டாக், விராட் கோலி முழு உடல் தகுதியுடன் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

இது குறித்து பேசிய அவர், "விராட் கோலி முழு உடல் தகுதியை எட்டி விட்டார். அவர் இன்று பயிற்சி செய்தார். இரண்டாவது ஒருநாள் போட்டியில் அவர் விளையாடுவது உறுதி. கோலிக்கு பதில் யார் அணியை விட்டு செல்வார்கள் என்பது இன்னும் முடிவு செய்யவில்லை. அதனை பயிற்சியாளரும் கேப்டனும் தான் எடுப்பார்கள்".
"அதே சமயம் எங்கள் அணியில் இடது கை வலது கை பேட்ஸ்மேன்கள் களத்தில் இருக்கும் வகையில் பேட்டிங் வரிசையில் மாற்றி அமைத்திருக்கின்றோம். ரோகித் சர்மா பேட்டிங்கில் தடுமாறுவது போல் எனக்கு தெரியவில்லை. ரோகித் கடைசியாக விளையாடிய மூன்று ஒரு நாள் போட்டிகளில் சராசரியாக 50 ரன்கள் அடித்திருக்கிறார்".
"ரோகித் சர்மா சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட்டின் 31 சதம் அடித்திருக்கிறார் என்பதை மறந்து விட வேண்டாம். சில சமயம் வீரர்கள் சிறிது காலம் தடுமாறுவார்கள். ஆனால் அது எனக்கு எந்த கவலையும் கொடுக்கவில்லை. ஆஸ்திரேலிய மைதானங்களில் ரோகித் சர்மா தடுமாறியது உண்மைதான்".
"ஆனால் ஒரு நாள் கிரிக்கெட்டில் அவர் அபாரமாக செயல்பட்டு இருக்கிறார். எனவே ரோகித் சர்மா குறித்து எந்த கவலையும் அணியில் இல்லை. முதல் போட்டியில் நாங்கள் இரண்டு விக்கெட்டுகளை இழந்தோம். எனினும் எங்கள் அணியின் நடுவரிசை வீரர்கள் தங்களது பொறுப்புகளை உணர்ந்து ரன்கள் சேர்த்தார்கள். எங்கள் அணி வீரர்கள் வெற்றி பெற வேண்டும் என்ற உத்வேகத்தில் விளையாடினார்கள்".
"எதிரணியை மீண்டும் ஆட்டத்திற்குள் வர நாங்கள் அனுமதிக்கவில்லை. சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கான அணி தற்போது நல்ல முறையில் இருக்கின்றது. பிளேயிங் லெவனில் வேறு ஏதேனும் வீரர் புதிதாக வருவார்களா என்பது குறித்து கேப்டனும் பயிற்சியாளரும் தான் அறிவிப்பார்கள். இதே போன்று சமி நல்ல உடல் தகுதியுடன் இருக்கின்றார். பும்ரா உடல் தகுதி என்ன என்று எனக்கு இதுவரை தெரியவில்லை. அதனை பிசியோ நிபுணர்களிடம் தான் கேட்க வேண்டும்" என்று கோடக் கூறியுள்ளார்.