ஐதராபாத் : இங்கிலாந்து அணி எந்த இலக்கை நிர்ணயித்தாலும் அது குறித்து கவலை இல்லை என்று இந்திய அணியில் பந்துவீச்சு பயிற்சியாளர் பராஸ் மாம்ப்ரே கூறியிருக்கிறார். ஹைதராபாத்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 246 ரன்களுக்கு ஆட்டமிழக்க இந்திய அணி 436 ரன்கள் எடுத்தது.
இதனை அடுத்து 190 ரன்கள் பின்தங்கிய நிலையில் இங்கிலாந்து அணியில் ஆலி போப் அபாரமாக விளையாடி 148 ரன்கள் சேர்த்தார். இதன் மூலம் இங்கிலாந்து அணி மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 316 ரன்கள் எடுத்துள்ளது.

இதன் மூலம் இந்தியாவை விட 126 ரன்கள் தற்போது இங்கிலாந்து முன்னிலையில் இருக்கிறது. இந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய இந்திய அணியின் பந்து வீச்சு பயிற்சியாளர் பராஸ் மாம்ப்ரே, ஆலி போப் ஆடிய சில சாட்டுகள் இந்திய அணிக்கு நெருக்கடியை ஏற்படுத்தியதாக தெரிவித்தார். இது குறித்து பேசிய அவர், தற்போது இங்கிலாந்து அணி எந்த இலக்கு நிர்ணயிக்கும் என்பது குறித்து எல்லாம் நாங்கள் யோசிக்கவில்லை.
எங்களுடைய குறிக்கோள் எல்லாம் நான்காவது நாள் ஆட்டம் தொடக்கத்தில் அபாரமாக பந்து வீசி விக்கெட்டுகளை எடுக்க வேண்டும். இங்கிலாந்து ரன்களை கட்டுப்படுத்த வேண்டும். இரண்டாவது இன்னிங்சில் இங்கிலாந்து எந்த இலக்கை நிர்ணயிக்கப் போகிறது என்பது குறித்து நாங்கள் கவலைப்படவில்லை. மேலும் அது குறித்து யோசித்து எங்களுக்கு நாங்களே அழுத்தத்தை ஏற்படுத்திக் கொள்ள விரும்பவில்லை.
சரியான முறையில் பந்து வீசி விக்கெட் எடுக்க முயற்சி செய்வோம். முதல் இன்னிங்சை விட தற்போது இரண்டாவது இன்னிங்சில் ஆடுகளம் கொஞ்சம் மாறி இருக்கிறது. பேட்டிங்கிற்கு சாதகமாக இருக்கிறது. கடைசி இரண்டு நாளில் ஆடுகளம் மேலும் தோய்வடையும் என எதிர்பார்க்கிறேன். இந்திய ஆடுகளங்களில் பொதுவாக கடைசி இரண்டு நாட்களில் பந்து நன்றாக திரும்பும்.
ஆனால் சவால் தரும் அளவுக்கு ஹைதராபாத் ஆடுகளம் செயல்படாது என நினைக்கிறேன். ஆலி போப்பின் ஆட்டம் பிரமிக்க வைக்கிறது. அவர் ஒரு சில சாட்டை ஆடி ரன்களை சேர்த்தார். தொடர்ந்து அவர் இதுபோல் விளையாடி எதிரணியை நெருக்கடிக்கு ஆளாக்கினார். இந்திய வீரர்கள் பொறுமை காத்து பந்து வீசினால் விரைவாக விக்கெட்டுகளை வீழ்த்த முடியும் என்று பராஸ் மாம்ப்ரே கூறியுள்ளார்.