ஐதராபாத் : இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் தோல்விக்கு கேப்டன் ரோகித் சர்மா கேப்டனாக எடுத்த சில முடிவுகளே காரணமாக அமைந்துள்ளது.
இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 100 ரன்களுக்கு மேல் முன்னிலை பெற்ற போதும் இந்திய அணி தோல்வியடைவது இதுவே முதல்முறையாகும். இந்த தோல்விக்கு இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மாவின் கேப்டன்சியே காரணமாக அமைந்துள்ளது.

4வது நாளில் மட்டும் இங்கிலாந்து அணியின் போப், ரெஹான் அஹ்மத், ஹார்ட்லி ஆகியோர் இணைந்து 104 ரன்களை குவித்தனர். இந்த 104 ரன்களை இந்திய அணி சாதாரணமாக விட்டுக் கொடுத்தது என்றே சொல்லலாம். ஒவ்வொரு நாளின் முதல் செஷனிலும் பவுலிங் செய்யும் அணிகள் அட்டாக் செய்யும் மனநிலையுடன் தான் களமிறங்குவார்கள்.
ஆனால் நேற்றைய நாளின் முதல் செஷனிலேயே ரோகித் சர்மா டிஃபென்சிவ் மனநிலையுடன் தான் களமிறங்கினார். பவுண்டரிகளை தடுக்க வேண்டும் என்பதற்காக ஃபீல்டர்களை பவுண்டரி எல்லைக்கு கொண்டு சென்றார். அதுவே ஹார்ட்லி மற்றும் போப் இருவருக்கும் எளிதாக ரன்கள் எடுக்க காரணமாக மாறியது. ஏனென்றால் பென் ஸ்டோக்ஸை போல் போப் ஸ்ட்ரோக் செய்து ரன்கள் சேர்க்கும் வீரர் கிடையாது.
அவர் ஹார்ட்லி மீது நம்பிக்கை வைத்து எளிதாக 1,2 என்று ரன்களை ஓடியே எடுத்தார். அதனை கடைசி வரை புரிந்து கொள்ளாமல் ஃபீல்டர்களை கொஞ்சம் கூட அருகில் கொண்டு வரவே இல்லை. போப் ரிவர்ஸ் ஸ்வீப் மூலம் ரன்களை சேர்க்கும் போது பும்ராவை வைத்து அட்டாக் செய்திருக்க வேண்டும். ஆனால் பும்ராவுக்கு சில ஓவர்கள் தொடக்கத்தில் கொடுத்துவிட்டு, கடைசியில் அட்டாக்கில் கொண்டு வந்தார் ரோகித் சர்மா.
கிட்டத்தட்ட 190 ரன்கள் முன்னிலை பெற்றுவிட்டோம் என்பதை மறந்துவிட்டு ரோகித் சர்மா களத்தில் அட்டாக் செய்யாமல், கடைசி வரை டிஃபென்சிவ் ஆட்டத்தையே விளையாடிக் கொண்டிருந்தார். அதேபோல் பேட்டிங்கிலும் ஜெய்ஸ்வால், அக்சர் படேல் உள்ளிட்டோரை கவுன்டர்-அட்டாக் செய்ய அனுமதிக்காமல் அவர்களையும் டிஃபென்சிவாக ஆட வைத்து சொதப்பினார்.
கிட்டத்தட்ட தோல்விக்கு பயந்து இந்திய அணி விளையாடியதை களத்தில் பார்க்க முடிந்தது. தோனியின் கேப்டன்சியில் இந்திய அணி சொந்த மண்ணில் இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் தோல்வியடைந்த போது, இங்கிலாந்து டெய்லண்டர்கள் பேட்டிங் செய்ய வரும் போது ஃபீல்டர்களை பவுண்டரி எல்லையில் நிறுத்துவார். அதனால் இங்கிலாந்து அணி ஒவ்வொரு இன்னிங்ஸிலும் கூடுதலாக 50 ரன்களை சேர்த்தது. இதுவே இந்திய அணி தொடரை இழந்ததற்கும் காரணமாக அமைந்தது. அதனை தான் மீண்டும் ரோகித் சர்மா செய்து வருவதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.