மும்பை : இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டி இன்று அகமதாபாத் நகரில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது. 3 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இந்திய அணி இரண்டுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் தொடரை ஏற்கனவே வென்றுள்ள நிலையில், ஆறுதல் வெற்றியை பெற வேண்டிய கட்டாயத்தில் இங்கிலாந்து அணி இருக்கிறது.
இந்த சூழலில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் ஜாஸ் பட்லர், முதலில் பந்து வீசுவதாக அறிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், நாங்கள் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்கின்றோம்.

ஏனென்றால் இரவு நேரத்தில் பணிபொழிவு இருக்கும் என நினைக்கின்றேன். மேலும் ஆடுகளம் சுழற் பந்துவீச்சுக்கு சாதகமாக செயல்படும் என்றும் கருதுகிறேன். அது மட்டும் இல்லாமல் கடந்த இரண்டு போட்டிகளிலும் நாங்கள் முதலில் பேட்டிங் செய்தோம். எனவே சாம்பியன்ஸ் கோப்பை தொடர் நடைபெற இருக்கிறது. இதற்கு தயாராகும் விதமாக சேஸ் செய்யவும் நாங்கள் தயாராக இருக்க வேண்டும் என்பதற்காக இந்த முடிவை எடுத்து இருக்கின்றோம்.
நாங்கள் இந்த ஆடுகளத்தில் நியூசிலாந்துக்கு எதிராக கடந்த 50 ஓவர் உலகக் கோப்பையில் விளையாடினோம். தற்போது ஆடுகளத்தில் களிமண் சேர்க்கப்பட்டிருக்கிறது. எனவே ஆட்டத்தின் இரண்டாவது பகுதி பேட்டிங்கிற்கு சாதகமாக இருக்கும் என நினைக்கின்றேன். இங்கிலாந்து அணியில் டாம் பேட்டன் பிளேயிங் லெவனுக்குள் வந்திருப்பதாக பட்லர் கூறினார்.
இதை தொடர்ந்து பேசிய இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா, தாங்கள் முதலில் பேட்டிங் செய்ய தான் முடிவு எடுத்திருந்தோம். முதலில் விளையாடி ரன்கள் குவித்து அதை தற்காத்துக் கொள்ள முயற்சி செய்வோம். அது மட்டும் இல்லாமல் முதல் இரண்டு போட்டிகளிலும் நாங்கள் முதலில் பந்துவீச்சை செய்தோம்.
எனவே மூன்றாவது போட்டியில் பேட்டிங் செய்ய திட்டமிட்டு இருந்தோம். கடைசி போட்டியிலும் வெற்றி பெற்று நல்ல மனநிலையுடன் சாம்பியன்ஸ் கோப்பைத் தொடருக்கு செல்ல இருக்கின்றோம். எங்கள் அணியின் இளம் வீரர்கள் சிறப்பாக செயல்பட்டார்கள். குறிப்பாக பில்டிங்கில் அனைவரும் 100 சதவீதத்தை கொடுத்தார்கள். அதை இந்த போட்டியிலும் தொடர போகின்றோம்.
எங்கள் அணி வீரர்களுக்கு நெருக்கடி ஏற்படுத்திக் கூடாது என்பதில் நான் தெளிவாக இருக்கின்றேன். அவர்களுடைய திறமை என்னவென்று அவர்களுக்கு கண்டிப்பாக தெரியும். எங்கள் அணியில் இன்று ஜடேஜா மற்றும் ஷமி ஆகியோருக்கு ஓய்வு வழங்க இருக்கின்றோம். அது மட்டுமில்லாமல் வருண் சக்கரவர்த்திக்கு காலில் லேசான வீக்கம் ஏற்பட்டு இருக்கிறது. இதனால் அவர் இன்றைய ஆட்டத்தில் விளையாடவில்லை. இதன் காரணமாக வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ் மற்றும் ஆர்ஸ்தீப் ஆகியோர் அணிக்குள் திரும்பி இருக்கிறார்கள் என்று ரோகித் சர்மா கூறியுள்ளார்.