தரம்சாலா : இங்கிலாந்து அணிக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியின் 2வது நாள் ஆட்டத்தின் முடிவில் இந்திய அணி 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 473 ரன்களை குவித்துள்ளது.
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான கடைசி டெஸ்ட் போட்டி தரம்சாலா மைதானத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. முதல் பேட்டிங் ஆடிய இங்கிலாந்து அணி 218 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியது. இதன்பின் முதல் நாளில் பேட்டிங்கை தொடங்கிய இந்திய அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 135 ரன்களை சேர்த்திருந்தது. இதன்பின் 2வது நாள் ஆட்டத்தை ரோகித் சர்மா - சுப்மன் கில் இருவரும் தொடங்கினர்.

2வது நாளின் தொடக்கம் முதலே இருவருமே அதிரடியாக ரன்களை சேர்த்த நிலையில், இந்திய அணியின் ஸ்கோர் வேகமாக உயர்ந்தது. சிறப்பாக ஆடிய ரோகித் சர்மா தனது 12வது சதத்தையும், சுப்மன் கில் தனது 4வது சதத்தையும் விளாசினர். இதனால் முதல் செஷனிலேயே இந்திய அணி 129 ரன்களை குவித்தது. அதுமட்டுமல்லாமல் முன்னிலையையும் எட்டியது.
பின்னர் 2வது செஷனில் 2வது ஓவரிலேயே ரோகித் சர்மா 103 ரன்களிலும், 3வது ஓவரில் சுப்மன் கில் 110 ரன்களிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர். பின்னர் அறிமுக வீரர் தேவ்தத் படிக்கல் - சர்பராஸ் கான் இருவரும் கூட்டணி அமைத்தனர். நிதானமாக தொடங்கிய சர்பராஸ் கான், ஒரு கட்டத்தில் மார்க் வுட்டை அட்டாக் செய்ய தொடங்கி ஷாக் கொடுத்தார். சிறப்பாக ஆடிய சர்பராஸ் கான் தனது 3வது அரைசதத்தை விளாசினார்.
4வது விக்கெட்டுக்கு 97 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில், சர்பராஸ் கான் 56 ரன்களில் ஆட்டமிழந்தார். இருப்பினும் சிறப்பாக ஆடிய தேவ்தத் படிக்கல் சிக்ஸ் அடித்து அரைசதத்தை எட்டினார். சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தேவ்தத் படிக்கல் 65 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் வந்த துருவ் ஜுரெல் சிக்ஸ் அடிக்கும் ஆசையில் 15 ரன்களிலும், ஜடேஜா 15 ரன்களிலும், அஸ்வின் டக் அவுட்டாகியும் வெளியேறினர். 25 ரன்களில் 4 விக்கெட்டுகளை இழந்து இந்திய அணி தடுமாறியது.
பின்னர் இணைந்த குல்தீப் யாதவ் - பும்ரா கூட்டணி கடைசி 18 ஓவர்களில் 45 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்தியது. இதனால் 2வது நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 473 ரன்களை குவித்துள்ளது. குல்தீப் யாதவ் 27 ரன்களிலும், பும்ரா 19 ரன்களிலும் களத்தில் உள்ளனர். இதன் மூலமாக இந்திய அணி 255 ரன்கள் முன்னிலையுடன் உள்ளது. 3வது நாள் ஆட்டத்திலும் இந்திய அணி கூடுதலாக 50 ரன்கள் சேர்க்கும் பட்சத்திலும், மீண்டும் 2வது இன்னிங்ஸில் இந்திய அணி வீரர்கள் பேட்டிங் செய்ய வாய்ப்பில்லை என்று பார்க்கப்படுகிறது.