லக்னோ: இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மாவுக்கு பிரம்மாண்ட சாதனையை படைக்க வாய்ப்பு கிடைத்துள்ளது.
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. முதல் பாதி போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில், அரையிறுதிக்கு முன்னேறும் அணிகளில் 2 அணிகள் மட்டுமே கிட்டத்தட்ட அருகில் உள்ளன. அதில் இந்திய அணி 5 போட்டிகளிலும் விளையாடி 10 புள்ளிகளுடன் கிட்டத்தட்ட அரையிறுதி சுற்றில் ஒரு காலை வைத்துவிட்டது என்றே சொல்லலாம்.

இந்திய அணியின் வெற்றிக்கு கேப்டன் ரோகித் சர்மா முக்கியமான காரணமாக அமைந்துள்ளார். ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியை தவிர்த்து ஒவ்வொரு போட்டியிலும் ரோகித் சர்மா பவர் பிளே ஓவர்களில் ருத்ர தாண்டவம் ஆடியிருக்கிறார். இவரின் அதிரடி காரணமாக முதல் 15 ஓவர்களிலேயே எதிரணியின் வீரர்களின் வெற்றிக்கான நம்பிக்கை தகர்ந்துவிடுகிறது.
இதுவரை 5 போட்டிகளில் விளையாடியுள்ள ரோகித் சர்மா 17 சிக்சர்கள் உட்பட 311 ரன்களை குவித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் உலகக்கோப்பை தொடரில் அதிக சதங்களை விளாசிய வீரர் என்ற சாதனையையும் ரோகித் சர்மா படைத்தார். அதேபோல் இந்திய அணிக்காக உலகக்கோப்பை தொடரில் அதிக சிக்சர்கள் விளாசிய வீரர், சர்வதேச கிரிக்கெட்டில் அதிக சிக்சர்கள் விளாசிய கிறிஸ் கெய்ல் சாதனையையும் முறியடித்தார்.
இந்த நிலையில் ரோகித் சர்மாவுக்கு மற்றொரு முக்கியமான சாதனையை படைக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் 47 ரன்கள் சேர்க்கும் பட்சத்தில் சர்வதேச கிரிக்கெட்டில் 18 ஆயிரம் ரன்களை குவித்த வீரர் என்ற சாதனையை ரோகித் சர்மா படைப்பார். இதுவரை ஒருநாள் கிரிக்கெட்டில் 10,423 ரன்களை ரோகித் சர்மா சேர்த்துள்ளார்.
அதேபோல் டெஸ்ட் கிரிக்கெட்டில் 3,677 ரன்களையும், டி20 கிரிக்கெட்டில் 3,853 ரன்களையும் ரோகித் சர்மா சேர்த்துள்ளார். மொத்தமாக 17,953 ரன்களை ரோகித் சர்மா குவித்துள்ளார். இதனால் இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் ரோகித் சர்மாவின் பேட்டிங் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.