பிர்மிங்காம்: இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் பும்ராவுக்கு பயந்து தான் வேகமாக விளையாடி வெற்றியை பெற்றதாக இங்கிலாந்து அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஜெமி ஸ்மித் தெரிவித்துள்ளார். முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா நிர்ணயித்த 371 என்ற இலக்கை 5 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது.
இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு 22 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் இரண்டாவது புதிய பந்தை இந்திய அணி எடுத்தது. அப்போது களத்தில் இருந்த இங்கிலாந்து பேட்ஸ்மேன் ஜெமி ஸ்மித், ஜடேஜா ஓவரில் ஒரு பவுண்டரி, இரண்டு சிக்சர் அடித்தார்.

இதன் மூலம் புதிய பந்து எடுத்த இரண்டு ஓவர்களில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், ஆட்டத்தின் ஒரு கட்டத்தில் வெற்றிக்கு அருகே நாங்கள் வந்துவிட்டோம். அப்போது பும்ரா வந்து பந்து வீசுவார் என்று எனக்கு தோன்றவில்லை.
ஆனால் இரண்டாவது பந்தை எடுத்த பிறகு ஒருவேளை பும்ரா வந்து பந்து வீசினால் எது வேண்டுமானாலும் நடக்கலாம் என்பதை மட்டும் நான் தெரிந்து கொண்டிருந்தேன். ஏனென்றால் அதன் பிறகு பெரிய அளவு பேட்ஸ்மேன்கள் எங்கள் பேட்டிங் வரிசையில் இல்லை. இரண்டு நல்ல பந்துகளில் இரண்டு விக்கெட் விழுந்தால் திடீரென்று எட்டு விக்கெட்டுகளை நாங்கள் இழந்திருப்போம்.
இதனால் நெருக்கடி எங்கள் மீது வந்திருக்கும். எனவே அப்படி ஒரு சூழல் வந்து விடக்கூடாது என்பதற்காகத்தான் நாங்கள் அதிரடி காட்டி வெற்றி பெற்றோம். புதிய பந்து வரப்போகிறது என்பது எங்களுக்கு தெரியும். அப்போது எட்டாவது வீரராக கிறிஸ் வொக்ஸ் பேட்டிங் செய்தால் அது அவரை சிக்கலில் மாட்டிவிடும் என்று நினைத்தேன்.
இதனால் தான் ஜடேஜா பவுலிங்கில் இரண்டு சிக்ஸர்களை அடித்தோம். இதன் மூலம் புதிய பந்தை இந்தியா பயன்படுத்தும் போது காற்று எங்கள் பக்கம் வீசத் தொடங்கியது. எப்போதுமே இரண்டாவது புதிய பந்து விக்கெட் எடுக்க உதவும். அதேசமயம் பேட்ஸ்மேன்களும் ரன் சேர்க்க ஒரு வாய்ப்பாகவும் இருக்கும். இதையெல்லாம் கணக்கிட்டு தான் நாங்கள் ஜடேஜா ஓவரில் அதிரடியாக விளையாடினோம் என்று ஜெமி ஸ்மித் தெரிவித்துள்ளார்.