பிர்மிங்காம்: இந்திய டெஸ்ட் அணி இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பங்கேற்க உள்ள நிலையில், அதற்கு முன்னதாக நேற்று பயிற்சியில் ஈடுபட்டிருந்தது. அப்போது இந்திய அணியில் இரண்டு வேகப்பந்துவீச்சாளர்கள் இடம்பெறவில்லை. இது ரசிகர்கள் இடையே கவலையை ஏற்படுத்தி உள்ளது.
ஜஸ்பிரித் பும்ரா மற்றும் பிரசித் கிருஷ்ணா ஆகிய இருவரும் வலைப்பயிற்சியில் ஈடுபடவில்லை. இவர்கள் இருவருமே முதல் டெஸ்ட் போட்டியில் தலா ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தினர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களில் பிரசித் கிருஷ்ணா, ஒரு ஓவருக்கு சராசரியாக 6 ரன்களை வாரி இறைத்து ஏமாற்றம் அளித்திருந்தார். எனவே, அவருக்கு இரண்டாவது போட்டியில் வாய்ப்பு அளிக்கப்படாது எனக் கூறப்பட்டு வந்த நிலையில், அவர் வலைப்பயிற்சியில் ஈடுபடவில்லை.

ஆனால், ஜஸ்பிரித் பும்ரா முதல் போட்டியில் சிறப்பாகவே பந்துவீசி இருந்தார்; முதல் இன்னிங்ஸில் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார். அவர் இரண்டாவது போட்டியின்போது ஓய்வு பெற வாய்ப்பிருப்பதாக கூறப்பட்டுள்ள நிலையில், அவர் வலைப்பயிற்சியில் ஈடுபடவில்லை. இது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஏனெனில், முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் பந்துவீச்சு மிகவும் சுமாராக அமைந்தது. இந்த நிலையில், அணியின் ஒரே நம்பிக்கையான வேகப்பந்துவீச்சாளர் பும்ரா இரண்டாவது போட்டியில் ஆட மாட்டார் என்ற தகவலும், அதைத் தொடர்ந்து அவர் வலைப்பயிற்சியில் ஈடுபடாததும் ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
பும்ரா விளையாடவில்லை என்றால் இந்திய அணி எப்படி இரண்டாவது போட்டியை வெல்லும்? தற்போது ஜஸ்பிரித் பும்ரா மற்றும் பிரசித் கிருஷ்ணாவுக்கு பதிலாக எந்த இரண்டு வேகப்பந்துவீச்சாளர்கள் இந்திய அணியில் இடம்பெறப் போகிறார்கள்? என்ற கேள்விகளும் எழுந்துள்ளன.
இது ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் என்ற நிலையில், தற்போது முதல் போட்டி மட்டுமே முடிவடைந்துள்ளது. இன்னும் நான்கு போட்டிகள் மீதம் உள்ளன. அவற்றில் மூன்று போட்டிகளை வென்றால் மட்டுமே இந்தியாவால் இந்த டெஸ்ட் தொடரை வெல்ல முடியும்.
இந்திய அணியின் பேட்டிங்கைப் பொருத்தவரை, நான்கு வீரர்கள் மட்டுமே முதல் போட்டியில் ரன்கள் குவித்திருக்கின்றனர். அவர்கள் அனைவரும் சதம் அடித்தது மட்டுமே ஆறுதலாக உள்ளது. சாய் சுதர்சன், கருண் நாயர், ஜடேஜா ஆகியோர் பேட்டிங்கில் ஏமாற்றம் அளித்திருக்கின்றனர்.