லீட்ஸ்: இந்திய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியும் ரன் குவிப்பில் ஈடுபட்டு பதிலடி கொடுத்திருக்கின்றது. லீட்ஸ் நகரில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது.
இதனை அடுத்து களமிறங்கிய இந்திய அணியில் ஜெய்ஸ்வால், கில் ஆகியோர் அபாரமாக சதம் விளாசினார். இந்த நிலையில் 359 ரன்களுக்கு மூன்று விக்கெட் என்ற ஸ்கோருடன் இந்திய அணி இரண்டாவது நாள் ஆட்டத்தை தொடர்ந்தது.

பெரிய ஸ்கோர் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட கில் 147 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார். மறுபுறம் பண்ட், அபாரமாக விளையாடி தன்னுடைய ஏழாவது சதத்தை பூர்த்தி செய்தார். இந்திய அணி 600 ரன்களுக்கு மேல் முதல் இன்னிங்ஸ் எடுக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கருண் நாயர் ரசிகர்களை ஏமாற்றினார்.
ஜடேஜா 11 ரன்களிலும் ஷர்துல் தாக்கூர் ஒரு ரன்னிலும் ஆட்டமிழக்க இந்திய அணி 471 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
இதை அடுத்து இங்கிலாந்து அணி தங்களுடைய முதல் இன்னிங்ஸில் விளையாடியது. ஜாக் கிராலி, பும்ரா வீசிய ஆட்டத்தின் முதல் ஓவரிலே நான்கு ரன்களில் ஆட்டம் இழந்தார். இதனால் இங்கிலாந்து அணி தடுமாறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பென் டக்கட் மற்றும் ஆலி போப் ஆகியோர் பார்ட்னர்ஷிப் அமைத்து அதிரடியாக விளையாடினர்.
62 ரன்கள் எடுத்த டக்கட் இரண்டாவது விக்கெட்டுக்கு 122 ரன்கள் பார்ட்னர்ஷிப் சேர்த்த நிலையில் திரும்பினார். இதைத் தொடர்ந்து மூன்றாவது விக்கெட்டுக்கு ஆலி போப் மற்றும் ஜோ ரூட் ஜோடி நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. ஒருபுறம் ஆலி போப் அபாரமாக விளையாடி தனது ஒன்பதாவது சதத்தை பூர்த்தி செய்தார்.
ஒரு கட்டத்தில் இங்கிலாந்து அணி ஆதிக்கம் செலுத்திய நிலையில் மீண்டும் வந்த பும்ரா, ஜோ ரூட் விக்கெட்டை வீழ்த்தினார். இதன் மூலம் இந்தியா பக்கம் மீண்டும் காற்று வீச தொடங்கியது. இந்த சூழலில் தான் ஆட்டத்தின் கடைசி ஓவரில் ஹாரி புரூக் விக்கெட்டை பும்ரா வீழ்த்தினார். ஆனால் அது நோ பால் என அறிவிக்கப்பட்டது.
இதனால் ஹாரி புரூக் ஜீரோ ரன்களில் ஒரு லைஃப் கிடைத்திருக்கிறது. அந்த விக்கெட்டை மட்டும் பும்ரா வீழ்த்தி இருந்தால் இந்திய அணி ஆதிக்கம் செலுத்தி இருக்கும். தற்போது இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி 209 ரன்கள் எடுத்து மூன்று விக்கெட்டுகள் இழந்து விளையாடி வருகிறது. இது இந்திய அணி ஸ்கோரை விட 262 ரன்கள் குறைவாகும்.