லண்டன்: இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா, இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் ஒரே நாளில் இரண்டு மகத்தான சாதனைகளைப் படைத்து வரலாற்றில் இடம்பிடித்துள்ளார். லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டத்தில், கபில் தேவின் சாதனையை முறியடித்ததோடு, சர்வதேச கிரிக்கெட்டில் ஒரு புதிய உலக சாதனையையும் நிகழ்த்தியுள்ளார்.
இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் பும்ரா 27 ஓவர்களில் 74 ரன்கள் விட்டுக் கொடுத்து 5 விக்கெட்களை வீழ்த்தி இருந்தார். இதன் மூலம் இங்கிலாந்து மண்ணில் டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய இரண்டாவது இந்திய பந்துவீச்சாளர் என்ற பெருமையை பும்ரா பெற்றுள்ளார்.

இதற்கு முன்பு, கபில் தேவ் 43 விக்கெட்டுகளுடன் இந்த இடத்தில் இருந்தார். இந்தப் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டத்தில், இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ், ஜோ ரூட் மற்றும் கிறிஸ் வோக்ஸ் ஆகியோரின் விக்கெட்டுகளை அடுத்தடுத்து வீழ்த்தி, பும்ரா இந்த மைல்கல்லை எட்டினார். தற்போது இங்கிலாந்தில் 46 டெஸ்ட் விக்கெட்டுகளுடன் பும்ரா இரண்டாவது இடத்தில் உள்ளார். இஷாந்த் சர்மா 51 விக்கெட்டுகளுடன் இந்தப் பட்டியலில் முதலிடத்தில் நீடிக்கிறார்.
இதனைத் தொடர்ந்து, பும்ரா மற்றொரு வரலாற்றுச் சாதனையை நிகழ்த்தினார். சர்வதேச கிரிக்கெட்டில் (டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20) 450 விக்கெட்டுகளைக் கடந்த அவர், இந்த மைல்கல்லை எட்டிய பந்துவீச்சாளர்களில் மிகச்சிறந்த பந்துவீச்சு சராசரியைக் கொண்ட வீரர் என்ற உலக சாதனையைப் படைத்தார்.
பும்ரா தனது விக்கெட்டுகளை வெறும் 20.50 என்ற சராசரியில் வீழ்த்தியுள்ளார். இதன் மூலம், ஆஸ்திரேலியாவின் கிளென் மெக்ரா (21.76 சராசரி), தென்னாப்பிரிக்காவின் ஆலன் டொனால்ட் (22.04 சராசரி) மற்றும் மேற்கிந்தியத் தீவுகளின் கர்ட்லி ஆம்ப்ரோஸ் (22.11 சராசரி) போன்ற ஜாம்பவான்களை அவர் பின்னுக்குத் தள்ளியுள்ளார்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் 20-க்கும் குறைவான சராசரியையும், ஒருநாள் போட்டிகளில் 23.55 சராசரியையும் கொண்டுள்ள பும்ரா, தற்போதைய தலைசிறந்த பந்துவீச்சாளராக மீண்டும் நிரூபித்துள்ளார். பும்ரா 5 விக்கெட்களை வீழ்த்திய நிலையில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 387 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது.