மான்செஸ்டர்: இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான நான்காவது டெஸ்ட் போட்டியில், இந்திய அணியின் வேகப்பந்துவீச்சு ஜாம்பவான் ஜஸ்பிரித் பும்ரா, தனது டெஸ்ட் கிரிக்கெட் வாழ்வில் முதல்முறையாக ஒரு இன்னிங்ஸில் 100 ரன்களுக்கு மேல் விட்டுக்கொடுத்து மோசமான சாதனை படைத்துள்ளார். இங்கிலாந்து பேட்ஸ்மேன்களின் அபார ஆட்டத்தால் இந்திய அணி பெரும் நெருக்கடிக்குத் தள்ளப்பட்டுள்ளது.

டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது துல்லியமான பந்துவீச்சால் எதிரணிகளைத் திணறடிக்கும் பும்ராவிற்கு, இந்த நான்காவது டெஸ்ட் ஒரு மறக்க முடியாத கருப்பு நாளாக அமைந்தது. இந்தப் போட்டிக்கு முன்பு வரை, ஒரு டெஸ்ட் இன்னிங்ஸில் பும்ரா 100 ரன்களைக் கடந்ததே இல்லை. 2024-25 பார்டர்-கவாஸ்கர் டிராபியின் போது ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 99 ரன்கள் விட்டுக்கொடுத்ததே அவரது அதிகபட்சமாக இருந்தது.
ஆனால், இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் பும்ராவின் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்து, அவரை 100 ரன்களைக் கடக்க வைத்தனர். இந்தப் போட்டியில் பும்ரா 33 ஓவர்கள் வீசி 112 ரன்களை விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளை மட்டுமே வீழ்த்தினார்.
டாஸ் வென்று பேட்டிங்கைத் தேர்வு செய்த இங்கிலாந்து அணி, இந்திய பந்துவீச்சாளர்களைச் சோதித்து ரன் குவிப்பில் ஈடுபட்டது. குறிப்பாக, ஜோ ரூட் தனது அனுபவ ஆட்டத்தை வெளிப்படுத்தி 150 ரன்கள் குவித்தார். அவருக்குத் துணையாக, தொடக்க ஆட்டக்காரர்களான ஜாக் கிராலி 84 ரன்களும், பென் டக்கெட் 94 ரன்களும், மற்றும் ஒல்லி போப் 71 ரன்களும் விளாசினர். இதனால் இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்சில் 8 விக்கெட் இழப்பிற்கு 614 ரன்கள் என்ற இமாலய ஸ்கோரை எட்டியது. இந்திய பந்துவீச்சாளர்களில் பும்ரா, ஜடேஜா மற்றும் வாஷிங்டன் சுந்தர் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
பும்ராவின் இந்தச் சரிவுக்கு அவரது தொடர்ச்சியான பணிச்சுமையும் ஒரு முக்கியக் காரணமாகப் பார்க்கப்படுகிறது. தனது வித்தியாசமான பந்துவீச்சு ஆக்ஷன் காரணமாக, பும்ராவிற்கு அடிக்கடி காயம் ஏற்படும் அபாயம் உள்ளது. இதன் காரணமாகவே, இந்த 5 போட்டிகள் கொண்ட தொடரில் பும்ரா மூன்று போட்டிகளில் மட்டுமே விளையாடுவார் என அணி நிர்வாகம் முன்பே அறிவித்திருந்தது.
தொடர்ச்சியாகப் போட்டிகளில் விளையாடுவது, அவரது பந்துவீச்சின் வேகத்தையும், துல்லியத்தையும் பாதித்திருக்கலாம் என்று கிரிக்கெட் வல்லுநர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். கடந்த காலங்களில் பும்ரா சந்தித்த முதுகுவலிக் காயங்கள், அவரது பணிச்சுமையை கவனமாகக் கையாள வேண்டியதன் அவசியத்தை உணர்த்துகிறது.
இங்கிலாந்து அணி குவித்துள்ள பெரிய ஸ்கோர், இந்திய அணிக்குப் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்தின் முன்னிலையைக் கடந்து, போட்டியில் வெல்ல வேண்டும் என்றால் இந்திய பேட்ஸ்மேன்கள் ஒரு அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியாக வேண்டும். நான்காம் நாள் ஆட்டத்தில் இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸைத் தொடர்ந்து விளையாடி வருகிறது. பும்ராவின் இந்த மோசமான சாதனையும் அணியின் நிலையும், இந்திய ரசிகர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.