லண்டன்: இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணிக்கு ஒரு முக்கிய பின்னடைவு ஏற்பட்டது. 5 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பெற்ற நிலையில் மூன்றாவது போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது.
இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இங்கிலாந்து அணி எப்போதும் அதிரடியாக விளையாடி ரன்களை குவிக்கும் நிலையில் இன்று அதற்கு நேர்மாறாக பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

தொடக்கவீரர் பென் டக்கட் 40 பந்துகளில் 23 ரன்களும், ஜாக் கிராலி 43 பந்துகளில் 18 ரன்களிலும் நிதிஷ்குமார் பந்துவீச்சில் ஆட்டம் இழந்தனர். இந்த சூழலில் ஆலி போப் மற்றும் ஜோப்ரா ஆர்ச்சர் ஜோடி நிதானமாக விளையாடி ரன்களை சேர்த்தது. இதில் ஆலி போப் 104 பந்துகளை எதிர் கொண்டு 44 ரன்கள் சேர்த்த நிலையில் ஜடேஜா பந்துவீச்சில் ஆட்டம் இழந்தார்.
இந்த ஜோடி மூன்றாவது விக்கெட்டுக்கு 119 ரன்களை சேர்த்தது. இந்த நிலையில் உலகின் புதிய நம்பர் ஒன் டெஸ்ட் பேட்ஸ்மேன் ஆக தரவரிசையில் இடம் பிடித்த ஹாரி புரூக் களத்திற்கு வந்தார். கடந்த இரண்டு டெஸ்ட் போட்டிகளாக இங்கிலாந்துக்கு சிறப்பாக விளையாடும் ஹாரி புரூக் விக்கெட்டை வீழ்த்த இந்திய அணி கடுமையாக முயற்சிகளை எடுத்தது.
ஹாரி புரூக் வந்தவுடன் பந்தை பும்ரா கையில் கில் கொடுத்தார். ஆக்ரோஷமாக பந்துவீசி ஹாரி புரூக் 11 ரன்கள் எடுத்தபோது அவரை கிளீன் போல்ட் ஆக்கினார். இது ஆட்டத்தில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது. இதன் மூலம் 172 ரன்களுக்கு நான்கு விக்கெட்டுகளை இழந்து இங்கிலாந்து அணி தடுமாறியது.
ஹாரி புரூக் ஆட்டத்தையே கவர்ந்து சென்று விடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பும்ரா காய் நகர்த்தி அவருடைய விக்கெட்டை வீழ்த்தி இருக்கின்றார். இந்த சூழலில் இங்கிலாந்து அணியை முதல் இன்னிங்சில் 300 ரன்கள் எடுக்க விடக்கூடாது என்ற உத்வேகத்தில் இந்திய அணி வீரர்கள் உள்ளனர்.