மான்செஸ்டர் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 358 ரன்கள் எடுக்க இங்கிலாந்து அணி ஏழு விக்கெட் இழப்பிற்கு 544 ரன்கள் எடுத்திருக்கிறது. இதன் மூலம் இந்திய அணியை விட 186 ரன்கள் கூடுதலாக இங்கிலாந்து தற்போது அடித்திருக்கிறது.
கைவசம் மூன்று விக்கெட்டுகள் உள்ளன. ஐந்து போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இங்கிலாந்து அணி இரண்டுக்கு ஒன்று என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ள நிலையில் நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இருந்தது.

ஆனால் இந்திய அணியின் பந்துவீச்சு கொஞ்சம் கூட எடுபடவில்லை. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பும்ரா 28 ஓவர் வீசி 95 ரன்கள் விட்டுக் கொடுத்து ஒரு விக்கெட் மட்டும்தான் எடுத்திருக்கிறார். இதேபோன்று சிராஜ் 26 ஓவர் வீசி 113 ரன்கள் விட்டுக் கொடுத்து ஒரு விக்கெட்டை கைப்பற்றி இருக்கின்றார். 18 ஓவர்கள் வீசிய காம்போஜ் ஒரு விக்கெட்டை மட்டுமே எடுத்து 89 ரன்கள் விட்டு கொடுத்து இருக்கின்றார்.
ஜடேஜாவும், வாஷிங்டன் சுந்தரும் தலா இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றி இருக்கின்றார்கள். இந்த நிலையில் இந்தியாவின் ஸ்டார் வீரரான பும்ராவின் பவுலிங் வேகம் தற்போது குறைந்து வருகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் பும்ரா தான் வீசிய மொத்த பந்துகளில் சுமார் 39.84 சதவீதத்தை 140 கிலோ மீட்டர் வேகத்திற்கு மேல் வீசினார். ஆனால் லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் பும்ரா தாம் வீசிய பந்துவீச்சில் மொத்தமாக 26.84 சதவீத பந்துகளை மட்டுமே 140 கிலோ மீட்டர் வேகத்திற்கு மேல் வீசினார்.
ஆனால் மான்செஸ்டர் டெஸ்ட் போட்டியில் வெறும் 0.57 சதவீதம் பந்துகளை மட்டுமே அவர் 140 கிலோ மீட்டர் வேகத்திற்கு மேல் வீசி இருக்கின்றார். அதாவது 173 பந்துகளில் வெறும் ஒரு பந்து மட்டுமே பும்ரா 140 கிலோ மீட்டர் வேகத்துக்கு மேல் வீசி இருக்கின்றார்.இதன் மூலம் இந்திய அணியின் முக்கிய ஆயுதமான பும்ராவின் வேகம் குறைந்து கொண்டே வருகிறது.இதுதான் இந்தியாவின் பந்துவீச்சு எடுபடாததற்கு காரணம் என கூறப்படுகிறது