ராஜ்கோட் : இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவுக்கு ஓய்வு வழங்குவது குறித்து கேப்டன் ரோகித் சர்மா முடிவு செய்துள்ளார்.
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3வது டெஸ்ட் போட்டி பிப்.15ஆம் தேதி ராஜ்கோட் மைதானத்தில் தொடங்கவுள்ளது. இந்த போட்டியில் பங்கேற்பதற்கான இந்திய வீரர்கள் அனைவரும் ராக்ஜோட் வந்து பயிற்சியை தொடங்கியுள்ளனர். கிட்டத்தட்ட ஒரு வாரம் ஓய்வுக்கு பின் இந்திய வீரர்கள் கூடியுள்ளதால், அடுத்தடுத்து பயிற்சி தீவிரமாக்கப்பட்டுள்ளது.

அதேபோல் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தலைமையிலான குழு அடுத்த 3 டெஸ்ட் போட்டிகளுக்கான திட்டங்கள் குறித்து ஆலோசித்து வருகின்றன. குறிப்பாக நீண்ட டெஸ்ட் தொடர் என்பதால், எந்தெந்த வீரரை எந்த போட்டியில் விளையாட வைப்பது, யாருக்கு எந்த மைதானத்தில் ஓய்வு கொடுப்பது என்பதும் ஆலோசிக்கப்படுகிறது.
குறிப்பாக இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் பும்ராவுக்கு 3வது டெஸ்ட் போட்டியில் ஓய்வு வழங்கப்படுமா என்ற கேள்விகள் கடந்த சில நாட்களாக எழுந்துள்ளன. ஏனென்றால் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய பும்ரா, பிட்சில் எந்த உதவியும் இல்லாமலேயே 15 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார். 2வது டெஸ்டில் இந்திய அணி வெல்வதற்கு முக்கிய காரணமாகவும் அமைந்தார் பும்ரா.
இந்த நிலையில் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளரும், துணை கேப்டனுமான பும்ரா 3வது டெஸ்டில் விளையாடுவார் என்று தெரிய வந்துள்ளது. 3வது டெஸ்ட் போட்டியில் வென்ற பின், 4வது போட்டியில் ஓய்வு கொடுக்கலாம் என்று முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏனென்றால் 4வது டெஸ்ட் மற்றும் 5வது டெஸ்ட் போட்டிக்கு இடையில் 10 நாட்கள் இடைவெளி உள்ளது.
4வது டெஸ்டில் பும்ராவுக்கு ஓய்வு வழங்கினால் 2 வாரங்களுக்கு மேல் பும்ரா ஓய்வில் இருக்க முடியும். அதேபோல் 3வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெல்லும் பட்சத்தில் அடுத்தடுத்து போட்டிகளில் வென்று தொடரையும் கைப்பற்ற முடியும். ஏற்கனவே விராட் கோலி இல்லாத சூழலில், பவுலிங்கிலும் முக்கிய வீரர் இல்லாமல் களமிறங்க இந்திய அணி நிர்வாகம் விரும்பவ்ல்லை என்று கூறப்பட்டுள்ளது.
அதேபோல் இந்திய அணி வேகப்பந்துவீச்சாளர்கள் பும்ரா மட்டுமே நல்ல அனுபவம் கொண்டவர். சிராஜ் அனுபவத்தை பெற்றிருந்தாலும், பிட்சை கணிப்பது, எந்த லெந்தில் பவுலிங் செய்ய வேண்டும் என்பதை விரைந்து அறிந்து ஜூனியர் வீரர்களுக்கு அறிவுறுத்த இன்னும் கொஞ்சம் அனுபவம் தேவையாக உள்ளதும் காரணமாக பார்க்கப்படுகிறது.