லண்டன்: இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி வரும் வியாழக்கிழமை தொடங்குகிறது. இந்த போட்டிக்காக இரு அணி வீரர்களும் தற்போது லண்டன் வந்து சேர்ந்திருக்கிறார்கள். தற்போது இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பெற்று தொடரை சமன் செய்திருக்கின்றது.
இதனால் மூன்றாவது டெஸ்ட் போட்டி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்த நிலையில் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றிக்கு துருப்புச் சீட்டாக பும்ரா இருப்பார் என முன்னாள் இங்கிலாந்து அணி கேப்டன் நாசர் உசேன் தெரிவித்து இருக்கிறார்.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பும்ராவை இந்திய அணி சேர்க்காமல் எப்படி 20 விக்கெட்டுகளை எடுக்க போகிறார்கள் என்று பலரும் கேள்விகளை கேட்டார்கள். ஆனால் பேட்டிங்கிற்கு சாதகமான ஆடுகளத்தில் 20 விக்கெட்டுகளையும் வீழ்த்தி வெற்றியை தற்போது இந்திய அணி பெற்று இருக்கிறது.
தற்போது லார்ட்ஸ் மைதானத்தில் இந்திய அணியின் துருப்புச் சீட்டாக பும்ரா இருப்பார். இந்த மைதானத்தில் அவர் ஏற்கனவே அபாரமாக செயல்பட்டு இருக்கிறார். லார்ட்ஸ் மைதானத்தில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி கௌரவ பலகையில் அவருடைய பெயரை பொறிக்க வைக்க பும்ரா ஆர்வமாக இருப்பார்.
ஆனால் இங்கிலாந்தை பொறுத்த வரை அவருடைய பவுலர்கள் அனைவரும் மிகவும் சோர்வாக இருப்பார்கள். இதனால் சோர்வாக இருக்கும் பவுலர்களை நீக்கிவிட்டு புதிய இரண்டு பவுலர்களை இங்கிலாந்து அணி சேர்க்க வேண்டும். அப்படி சேர்த்தாலும் அது பிரச்சினையை தான் கொடுக்கும்.
ஏனென்றால் சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் ஆர்ச்சர் விளையாடி 4 ஆண்டுகள் ஆகிவிட்டது.
இதைப்போல் பெரிய அளவு டெஸ்ட் கிரிக்கெட்டில் சமீபகாலமாக கஸ் அட்கின்சன் விளையாடவில்லை. இதேபோன்று இங்கிலாந்தின் கேப்டன் ஸ்டோக்ஸ் மிகவும் சோர்வாக இருந்திருப்பார். கேப்டனாக இருப்பதில் இது ஒரு கடினமான விசயமாக இருக்கும். ஆனால் பும்ரா தொடர்பான அனைத்து கேள்விகளுக்கும் சந்தேகத்திற்கும் இரண்டாவது டெஸ்டில் கில் தன்னுடைய பேட்டிங் மூலம் பதில் அளித்து விட்டார் என்று நாசர் உசேன் தெரிவித்துள்ளார்.