மான்செஸ்டர்: சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து பும்ரா விரைவில் ஓய்வு பெற்று விடுவார் என்று முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் முஹம்மது கைஃப் தெரிவித்துள்ளார். இந்திய அணியின் நம்பர் 1 வேகப்பந்து வீச்சாளரான பும்ரா டெஸ்ட் கிரிக்கெட்டில் அபாரமாக விளையாடி வருகிறார்.
ஆனால் பும்ரா உடல் அவருடைய பந்து வீச்சுக்கு சரிவர ஒத்துழைப்பதில்லை. ஒரு காலத்தில் 140 கிலோ மீட்டர் வேகத்தில் சராசரியாக பந்து வீசிய பும்ரா தற்போது வெறும் 130 கிலோ மீட்டர் வேகத்தில் தான் வீசுகின்றார்.

தற்போது நடைபெற்று வரும் மான்செஸ்டர் டெஸ்ட் போட்டியில் பும்ரா தான் வீசிய 173 பந்துகளில் ஒரே ஒரு பந்து மட்டும்தான் 140 கிலோ மீட்டர் வேகத்திற்கு மேல் வீசி இருக்கின்றார். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் கிரிக்கெட் வீரர் முகமது கைஃப், "இனி அடுத்தடுத்த டெஸ்ட் போட்டிகளில் பும்ரா விளையாடுவதை நம் பார்க்க முடியாது என்று நினைக்கின்றேன்."
"அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு கூட எடுத்து விடலாம் என நினைக்கின்றேன். ஏனென்றால் அவருடைய உடல் கடுமையாக போராட்டத்தை சந்திக்கின்றது. அவருடைய உடல் ஒட்டுமொத்தமாக அவரை கைவிட்டதாக நினைக்கின்றேன். மான்செஸ்டர் டெஸ்ட் போட்டியில் அவருடைய பந்துவீச்சு வேகம் பெரும் அளவில் குறைந்திருக்கின்றது."
"இந்த டெஸ்ட் போட்டியில் எந்த வீரர்களுமே வேகமாக பந்து வீசவில்லை. பும்ரா ஒரு சுயநலம் இல்லாத வீரர். தம்மால் நாட்டுக்காக 100% பங்களிப்பை கொடுக்க முடியவில்லை என்று நினைத்தாலோ, அணிக்கு வெற்றியைத் தேடித் தர முடியவில்லை. விக்கெட்டுகளை எடுக்க முடியவில்லை என்று நினைத்தாலோ, நிச்சயம் அவர் ஓய்வு முடிவை அறிவித்து விடுவார்."
"இது என்னுடைய உள்ளுணர்வு சொல்கின்றது. பும்ரா எடுத்த விக்கெட் மணிக்கு 130 கிலோ மீட்டர் வேகத்தில் வீசிய பந்து தான். அதுவும் விக்கட் கீப்பர் டைவ் அடித்து பிடிக்கப்பட்ட கேட்ச் அது. அவருடைய உத்வேகம் குறையவில்லை என்றாலும், தன்னுடைய உடல் தகுதியிடம் அவர் தோற்று விட்டார் என்று நினைக்கின்றேன். பும்ரா நினைப்பது படி அவருடைய உடல் செயல்படுவதில்லை. எனவே விரைவிலே அவர் விளையாடாமல் போகலாம்."
"முதலில் கோலி, பின் ரோகித், அஸ்வின், தற்போது பும்ரா போன்ற வீரர்கள் இல்லாமல் டெஸ்ட் கிரிக்கெட்டை நாம் பார்த்து பழக வேண்டும். என்னுடைய கணிப்பு தவறாக போக வேண்டும் என்பதுதான் என்னுடைய ஆசை. ஆனால் இந்த போட்டியை பார்க்கும்போது பும்ரா மகிழ்ச்சியுடன் இந்த டெஸ்டில் விளையாடவில்லை என்று தான் தெரிகின்றது" என்று கைப் கூறியுள்ளார்.