லீட்ஸ்: இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸ் முடிவில் 6 ரன்கள் முன்னிலை பெற்று இருக்கிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
இதனை அடுத்து களமிறங்கிய இந்திய அணியில் ஜெய்ஸ்வால், கில் மற்றும் ரிஷப் பன்ட் ஆகியோர் சதம் அடித்தனர். இதனால் இந்திய அணி 471 ரன்கள் குவித்தது. இதனை அடுத்து இங்கிலாந்து அணி களம் இறங்கி அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தனர்.

209 ரன்களுக்கு மூன்று விக்கெட் என்ற ஸ்கோருடன் இங்கிலாந்து அணி மூன்றாவது நாள் ஆட்டத்தை தொடர்ந்தது.இதில் சிறப்பாக விளையாடிய ஆலி போப் 106 ரன்களில் ஆட்டம் இழந்தார். 11 பவுண்டரி, 2 சிக்சர் என இங்கிலாந்து அணியின் இன்னிங்சை கட்டமைத்தார். சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 99 ரன்களில் ஹாரி புரூக் ஆட்டம் இழந்தார்.
கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 20 ரன்கள் வெளியேற ஜெமி ஸ்மித் 40 ரன்கள் எடுத்தார். ஒரு கட்டத்தில் இங்கிலாந்து அணி சரிவை நோக்கி சென்ற நிலையில், கிறிஸ் வொக்ஸ் அதிரடி காட்டி 38 ரன்களும், பிரைடன் கார்ஸ் 22 ரன்களும் எடுத்தனர். இதன் மூலம் இங்கிலாந்து அணி 465 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
இதனை அடுத்து 6 ரன்கள் முன்னிலை பெற்ற இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸை விளையாடுகிறது.இந்திய அணியின் பந்துவீச்சில் பும்ரா ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார். பிரசித் கிருஷ்ணா மூன்று விக்கெட்டுகளையும், சிராஜ் இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றி இருக்கிறார்கள். தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா (SENA) நாடுகளில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய ஆசிய வீரர் என்ற சாதனையை பும்ரா படைத்திருக்கிறார்.
வசிம் அக்ரம் இந்த நாடுகளில் 146 விக்கெட்டுகளை வீழ்த்திய நிலையில் தற்போது பும்ரா 147 விக்கெட்டுகளை கைப்பற்றி இருக்கிறார். இதேபோன்று SENA நாடுகளில் அதிக முறை ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் என்ற பட்டியலில் முரளிதரன் சாதனையை பும்ரா தற்போது சமன் செய்துள்ளார். வசீம் அக்ரம் 11 முறை 5 விக்கெட்டுகளை வீழ்த்திய நிலையில், முரளிதரன் பத்து முறை 5 விக்கெட்டுகளை கைப்பற்றி இருக்கிறார்கள். இதேபோன்று இந்தியாவிற்கு வெளியே 12 முறை 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அதிக முறை ஐந்து விக்கெட்டுகளை இந்தியாவுக்கு வெளியே கைப்பற்றிய வீரர் என்ற சாதனையை பும்ரா படைத்திருக்கின்றார்.