ஐதராபாத் : இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர் பென் டக்கெட்டின் விக்கெட்டை வீழ்த்திய பின், இந்திய நட்சத்திர வீரர் பும்ரா ஆக்ரோஷமாக கொண்டாடியது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி ஐதராபாத் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 246 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டான நிலையில், இந்திய அணி 436 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டாகியது. இதன் மூலமாக இந்திய அணி 190 ரன்கள் முன்னிலை பெற்றது. இதனால் இங்கிலாந்து அணி மீதான எதிர்பார்ப்பு எகிறியது.

இந்த நிலையில் இரண்டாவது இன்னிங்ஸை இங்கிலாந்து அணியின் கிராலி - டக்கெட் கூட்டணி தொடங்கியது. வழக்கம் போல் விரைவாக ரன்கள் சேர்க்கப்பட்ட நிலையில், முதல் விக்கெட்டுக்கு 45 ரன்கள் சேர்க்கப்பட்டது. அப்போது அஸ்வின் வீசிய பந்தில் கிராலி 31 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். இதையடுத்து போப் - டக்கெட் கூட்டணி உணவு இடைவேளை வரை விக்கெட்டுகள் சரியாமல் ஆடியது.
3வது நாள் உணவு இடைவேளையின் போது இங்கிலாந்து அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 89 ரன்கள் குவித்திருந்தது. இதனால் உணவு இடைவேளைக்கு பின் இந்திய அணி விக்கெட் வீழ்த்த வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டது. இதன்பின் மீண்டும் ஆட்டம் தொடங்கிய நிலையில் அஸ்வின் மற்றும் பும்ரா அட்டாக்கை தொடங்கினர். அப்போது பும்ராவால் வீசப்பட்ட முதல் ஓவரின் கடைசி பந்து அபாரமான இன் ஸ்விங்கராக அமைந்தது.
அதனை எதிர்கொள்ள முடியாமல் பென் டக்கெட் தடுமாற, அந்த பந்து கால்களில் பட்டு சென்றது. அப்போது பும்ரா, ரோகித் சர்மாவிடம் டிஆர்எஸ் முறையீடலாம் என்று கோரினார். ஆனால் கேஎஸ் பரத் மறுக்க, டிஆர்எஸ் கேட்க வேண்டாம் என்று முடிவு செய்யப்பட்டது. ஆனால் அந்த ஓவருக்கு பின் ரீ-ப்ளேவில் அந்த பந்து விக்கெட் என்பது தெரிய வந்தது. இதனால் மைதானத்திலேயே பும்ரா தனது விரக்தியை வெளிப்படுத்தினார்.
இதன்பின் பும்ரா மீண்டும் அடுத்த ஓவரை வீச அழைக்கப்பட்டார். அந்த ஓவரின் முதல் 4 பந்துகளில் 2 பவுண்டரிகளை விளாசினார் பென் டக்கெட். இருப்பினும் பும்ரா அவருக்கு இன் ஸ்விங்கர், அவுட் ஸ்விங்கர் என்று மாற்றி மாற்றி வீசி கலங்கடித்தார். சரியாக 5வது பந்தில், ஆஃப் ஸ்டம்பை குறி வைத்து இன்ஸ்விங்கர் வீச, அதனை டக்கெட் மிஸ் செய்தார். அந்த பந்து ஆஃப் ஸ்டம்பை தூக்கி சென்றது. இதனால் டக்கெட் 47 ரன்களுக்கு ஆட்டமிழந்து வெளியேறினார்.
இதனால் உற்சாகமடைந்த பும்ரா ஆக்ரோஷமாக கொண்டாடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். அவர் வீசிய முதல் ஓவரிலேயே டக்கெட் அவுட்டான நிலையில், நடுவரின் தவறான முடிவு மற்றும் டிஆர்எஸ் எடுக்காததன் காரணமாக டக்கெட் தப்பினார். ஆனாலும் பும்ரா வீசிய 2வது ஓவரிலேயே அவரை வீழ்த்தியதன் காரணமாக பும்ரா ஆக்ரோஷமாக கொண்டாடினார்.