மும்பை: இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் புதிய கேப்டனாக சுப்மன் கில் நியமிக்கப்பட்டுள்ள நிலையில் அடுத்த கேப்டனாக பும்ரா வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தாம் ஏன் அந்த பதவிக்கு தேர்வு செய்யப்படவில்லை என்பது குறித்து முதல் முறையாக மௌனத்தை கலைத்திருக்கிறார்.
இந்திய டெஸ்ட் அணியில் கேப்டனாக ரோகித் சர்மா இருந்த நிலையில், அவர் சர்வதேச டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்று விட்டார்.ரோகித் சர்மா கேப்டனாக இருந்தபோதும் பும்ரா தான் துணை கேப்டனாக இருந்தார். அது மட்டும் இல்லாமல் ரோகித் காயமடைந்த போதெல்லாம் பும்ரா தான் ஆஸ்திரேலியாவில் இந்திய அணியை தலைமை தாங்கினார்.

இந்த தருணத்தில் தாம் அடுத்த கேப்டனாக நியமிக்கப்படவில்லை என்று பும்ரா தற்போது முதல் முறையாக பேட்டி அளித்திருக்கிறார். இது குறித்து பேசிய அவர், ஐபிஎல் தொடர் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது நான் பிசிசிஐயை தொடர்பு கொண்டேன்.
ஐந்து போட்டிகள் கொண்ட இங்கிலாந்து தொடரில் விளையாடுவதற்கு நான் ஆவலாக இருந்தேன். ஆனால் மருத்துவ நிபுணர்களுடன் நான் பேசியபோது என்னால் தொடர்ந்து ஐந்து டெஸ்ட் போட்டிகள் விளையாட முடியாது என தெரிந்தது. இதனால் என்னை கேப்டன் பொறுப்புக்கு பரிசீலிக்க வேண்டாம் என்று நான் தான் பிசிசிஐயிடம் கூறிவிட்டேன்.
இதன் காரணமாக தான் என்னை பிசிசிஐ கேப்டனாக நியமிக்கவில்லை. அது மட்டும் இல்லாமல் ஒரு கேப்டனாக இருந்தால் தொடர்ந்து ஐந்து போட்டிகளிலும் நான் விளையாட வேண்டும். வெறும் மூன்று போட்டிகள் மட்டும் விளையாடிவிட்டு அடுத்த போட்டிகளில் வேறு ஒருவரை கேப்டனாக விளையாட சொல்லுங்கள் என்று கூறுவது முட்டாள்தனம் என நான் நினைக்கின்றேன்.
இதனால் தான் தொடர் முழுவதும் அணியை வழிநடத்தக்கூடிய ஒரு வீர தேவை என்பதை நாங்கள் உணர்ந்தோம். தற்போது கில் கேப்டனாக நியமிக்கப்பட்டிருக்கிறார். அவர் எதிர்காலத்திலும் இந்திய அணியை வழிநடத்துவார் என்று நம்புகிறேன் என்று பும்ரா தெரிவித்துள்ளார்.