லண்டன்: இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் பும்ரா ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்திருக்கிறார். இதன் மூலம் இங்கிலாந்து மண்ணில் இரண்டாவது முறையாக பும்ரா ஐந்து விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.
அது மட்டும் இல்லாமல் சேனா நாடுகளில் அதிக முறை ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர்கள் பட்டியலில் பும்ரா வசீம் அக்ரமின் சாதனையை சமன் செய்துள்ளார். மேலும் இங்கிலாந்து மண்ணில் அதிக விக்கெட் வீழ்த்திய இந்திய வீரர்கள் பட்டியலில் கபில்தேவ், கும்ப்ளே ஆகியோரை பும்ரா முறியடித்து இருக்கின்றார்.

இந்த நிலையில் லண்டனில் செய்தியாளரிடம் பேசிய பும்ராவிடம், ஐந்து விக்கெட்டுகள் வீழ்த்தி விட்டு நீங்கள் ஏன் கொண்டாடவில்லை என்று கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் அளித்த பும்ரா, நான் சோர்வாக இருந்தேன். இதனால் என்னால் கொண்டாட முடியவில்லை. நான் ஒன்றும் குதித்துக் கொண்டாட்டத்தில் ஈடுபட 21, 22 வயது இளைஞர் கிடையாது.
எனவே நான் என்னுடைய அடுத்த பந்தை வீசுவதற்காக எப்போதும் போல் தயாராகி விட்டேன் என்று கூறினார். மேலும் நான் லார்ட்ஸ் மைதானத்தில் தன்னுடைய பெயர் ஹானர் போர்டில் இடம்பெற்றது மகிழ்ச்சி அளிப்பதாக குறிப்பிட்ட பும்ரா என்னுடைய மகனிடம் சொல்வதற்கு ஒரு நல்ல விஷயம் நடந்திருப்பதாக தெரிவித்துள்ளார்.
இதே போன்று நீங்கள் தான் வேகப்பந்து வீச்சுப்படையை வழிநடத்துகிறீர்கள். நீங்கள் சொல்வதை தான் நாங்கள் கேட்கிறோம் என நிதிஷ்குமார் சொல்லி இருக்கிறாரே. அதை பற்றி உங்கள் கருத்து என்ன என்று பும்ராவிடம் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த பும்ரா, நிதிஷ்குமார் பொய் சொல்கிறார். அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை.
நான் யாரிடமும் எதுவும் சொல்லவில்லை.நான் என்னுடைய கடந்த காலத்தில் இங்கு விளையாடிய அனுபவங்களை தான் நான் கூறினேன் என்று தெரிவித்தார். இதேபோன்று இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாடுவது குறித்து சர்ச்சைக்கு பதில் அளித்த பும்ரா மக்கள் எப்போதுமே ஒருவரை பற்றி குறை சொல்லி கொண்டு தான் இருப்பார்கள். சச்சின் டெண்டுல்கர் 200 டெஸ்ட் போட்டி விளையாடினார். இன்னும் அவரையும் தான் குறை சொன்னார்கள் என்று பும்ரா கூறினார்.