மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் பும்ரா இங்கிலாந்து தொடரில் சில போட்டிகளில் விளையாடாமல் போனது தான் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. இதனால் பலரும் பும்ராவை விமர்சித்து வருகின்றனர். சிராஜ் 5 போட்டிகளிலும் விளையாடிய நிலையில், பும்ராக்கு மட்டும் ஏன் இந்த ஸ்பெஷல் என்று குற்றம் சாட்டியுள்ளனர்.
உடல் தகுதி காரணமாக தான் இந்த முடிவை எடுத்திருப்பதாக இந்திய கிரிக்கெட் நிர்வாகிகளும் விளக்கம் அளித்து வருகின்றனர். இந்த தருணத்தில் முன்னாள் இந்திய அணி கேப்டன் திலீப் வெங்சர்கார், பும்ராவுக்கு ஒரு வினோத கோரிக்கையை வைத்திருக்கிறார்.

இது குறித்து பேசிய அவர், நான் மட்டும் தேர்வுக்குழு தலைவராக இருந்திருந்தால் மும்பை இந்தியன்ஸ் அணி உரிமையாளரான முகேஷ் அம்பானியை, பும்ராவை மும்பை அணியில் இருந்து விலக்கி வைக்க ஒப்புக்கொள்ள வைத்திருப்பேன்.
ஏனென்றால் ஐபிஎல் தொடரை விட இங்கிலாந்து தொடர் தான் மிகவும் முக்கியம் என்று அவரிடம் சொல்லி புரிய வைத்திருப்பேன். இல்லையென்றால் ஐபிஎல் தொடரில் ஒரு சில போட்டிகளில் மட்டும் விளையாட வையுங்கள் என்று அம்பானி இடம் பேசி இருப்பேன். இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர் என்பது எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது.
இதனால் இந்திய அணி நிர்வாகமே பும்ராவிடம் பேசி ஐபிஎல் தொடரிலிருந்து விலகுங்கள் என்று கூறி இருக்க வேண்டும். இது போன்ற முக்கியமான தொடர்களில் பும்ரா முழு உடல் தகுதியுடன் இருக்க வேண்டும். அதேசமயம், இங்கிலாந்து தொடரில் பும்ரா சில போட்டிகளில் விளையாடாமல் போனதற்கு அவரை குறை சொல்வதை நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன்.
ஏனென்றால் பும்ரா சமீபத்தில் தான் அறுவை சிகிச்சை மேற்கொண்டு இருக்கின்றார். இதனால் அவர் மீண்டும் காயம் அடைய வாய்ப்பு இருப்பதால் அவரை எச்சரிக்கையாக தான் கையாள வேண்டும். இந்திய நாட்டுக்காக விளையாடும் அவருடைய உத்வேகத்தை யாரும் கேள்வி கேட்க முடியாது. கடந்த காலங்களில் இந்திய அணிக்காக அனைத்தையும் அவர் வழங்கி இருக்கின்றார். தற்போது என்னுடைய எண்ணமெல்லாம் பும்ரா நல்ல ஓய்வு பெற்றுக் கொண்டு மீண்டும் இந்திய அணிக்காக முழு உடல் தகுதியுடன் விளையாட வேண்டும் என்று வெங்சர்கார் கூறியுள்ளார்.