லண்டன்: இந்திய வேகப்பந்து வீச்சு படையின் முன்னணி வீரர் ஜஸ்பிரீத் பும்ரா, தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீரை தனித்துவமான அணுகுமுறை கொண்டவர் என்று பாராட்டியுள்ளார். லீட்ஸில் உள்ள ஹெடிங்லியில் வெள்ளிக்கிழமை தொடங்கவிருக்கும் இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கு முன்னதாக, பும்ரா, கம்பீரின் பயிற்சி முறை குறித்து தனது கருத்துகளைப் பகிர்ந்தார்.
இது குறித்து பேசிய பும்ரா, "கம்பீர் மிகவும் தனித்துவமானவர். தேவைப்படும் நபருடன் உரையாடுவார். எல்லோரும் ஒரு திசையில் செல்லும்போது, அவருக்கு வேறு எண்ணங்கள் இருந்தால் தலையிடுவார். இந்திய கிரிக்கெட்டில் ஒரு சுவாரஸ்யமான கட்டத்தை அவர் கையாள்கிறார்."

"இரண்டு சுற்றுப்பயணங்களுக்கு முன்பு, எங்கள் அணி முற்றிலும் வேறுபட்டிருந்தது, இப்போது அது மாற்றத்தை நோக்கி செல்கிறது. இளம் வீரர்களுக்கு இப்போது அதிக பொறுமையும் அமைதியும் தேவை. அவரது அணுகுமுறையில் அவர் மிகவும் அமைதியாக இருக்கிறார், வீரர்கள் மகிழ்ச்சியாகவும் நன்றாகவும் உள்ளனர்," என்று பும்ரா தெரிவித்தார்.
பும்ராவின் இந்த பேச்சு கம்பீரை மறைமுகமாக விமர்சிப்பது போல் இருப்பதாக கிரிக்கெட் வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர். வீரர்கள் ஒரு பாதையில் செல்ல வேண்டும் என்று முடிவு எடுத்தால் அதனை கம்பீர் விரும்பவில்லை என்றால் தடுப்பார் என பும்ரா மறைமுகமாக குற்றச்சாட்டி இருக்கிறார்.
ஆஸ்திரேலிய பயணத்தில் கூட கடைசி டெஸ்ட் போட்டியில் ரிஷப் பண்ட் அதிரடியாக விளையாடி அரைசதம் அடித்து தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.
இந்த இன்னிங்ஸை பலரும் பாராட்டிய நிலையில் கம்பீர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். இதன் காரணமாக சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பிளேயிங் லெவனில் பண்ட் சேர்க்கப்படாமல் பெஞ்சில் உட்காரவைக்கப்பட்டிருந்தார்.
இதனால் நான் சொல்வதை கேட்க வேண்டும் என கம்பீர் நினைப்பதை மறைமுகமாக குத்திக் காட்டும் விதமாக பும்ரா இந்த கருத்தை தெரிவித்திருப்பதாக கிரிக்கெட் வல்லுநர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். மேலும் பும்ரா அடுத்த டெஸ்ட் கேப்டனாக வர இருந்த நிலையில் கம்பீர் தான் தலையிட்டு காயம் அடையும் பவுலருக்கு கேப்டன் பதவி வழங்கக்கூடாது என்று தடுத்ததாக செய்திகள் வெளியானது. இதுவும் பும்ராவுக்கு ஒரு கோபத்தை ஏற்படுத்தியிருக்கலாம் என தெரிகிறது.