லண்டன்: இந்தியக் கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சு ஜாம்பவான் ஜஸ்பிரித் பும்ரா, இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் தனது அபார பந்துவீச்சால் 5 விக்கெட் வீழ்த்தி அசத்தினாலும், பேட்டிங்கில் தொடர்ந்து சொதப்பி வருவது இந்திய அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறும் இந்த டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில், பும்ரா 74 ரன்களை விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றி இங்கிலாந்து அணியை 387 ரன்களுக்குள் கட்டுப்படுத்த உதவினார். இதன்மூலம் லார்ட்ஸ் மைதானத்தின் ஹானர்ஸ் போர்டு எனப்படும் சாதனைப் பலகையிலும் தனது பெயரைப் பதித்தார் பும்ரா.

ஆனால், பேட்டிங்கில் அவரது கதை தலைகீழாக இருந்தது. அவர் ஒரு பேட்ஸ்மேனாக அரைசதம் அடிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு இல்லை என்றாலும் டெஸ்ட் போட்டிகளில் உடன் இருக்கும் பேட்ஸ்மேனுக்கு ஒத்துழைப்பு அளித்து சில ஓவர்கள் களத்தில் நிற்க வேண்டும் என்ற அவசியம் உள்ளது.
இந்த நிலையில், இந்திய அணியின் முதல் இன்னிங்ஸில் 10வது வீரராகக் களமிறங்கிய பும்ரா, 8 பந்துகளை மட்டுமே சந்தித்து ரன் ஏதும் எடுக்காமல் 'டக்' அவுட் ஆகி ஏமாற்றமளித்தார். கிறிஸ் வோக்ஸ் பந்துவீச்சில் அவர் ஆட்டமிழந்தார். இது இந்தத் தொடரில் அவர் பெறும் மூன்றாவது தொடர்ச்சியான டக் அவுட் ஆகும். கடந்த ஏழு இன்னிங்ஸ்களில் இது அவருக்கு ஆறாவது டக் அவுட் என்பது குறிப்பிடத்தக்கது.
டிசம்பர் 2024-ல் மெல்போர்னில் நடந்த பாக்சிங் டே டெஸ்டில் இருந்து லார்ட்ஸ் டெஸ்ட் வரை பும்ராவின் ரன்கள் 0, 0, 22, 0, 0, 0, 0 என மிகவும் மோசமாக உள்ளது. சிட்னியில் அவர் எடுத்த 22 ரன்களைத் தவிர மற்ற அனைத்து இன்னிங்ஸ்களிலும் அவர் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்துள்ளார்.
பும்ராவின் முக்கியப் பணி பந்துவீச்சு என்றாலும், டெஸ்ட் போட்டிகளில் பின்வரிசை வீரர்களின் பங்களிப்பு மிகவும் முக்கியமானது என்பதை கருத்தில் கொண்டு அவர் 15, 20 ரன்கள் எடுக்க வேண்டும், 10 ஓவர்கள் களத்தில் இருக்க வேண்டும் என்ற தேவை உள்ளது. பும்ரா ஆட்டமிழந்ததால், இந்தியாவால் முதல் இன்னிங்ஸில் முன்னிலை பெற முடியாமல் போனது. இந்திய அணி, இங்கிலாந்தின் ஸ்கோரான 387 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. தற்போது போட்டி சமநிலையில் உள்ள நிலையில், பும்ரா பேட்டிங்கிலும் சிறிதளவு பங்களிப்பை அளித்தால் அது அணியின் வெற்றிக்கு முக்கிய காரணியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.