பிர்மிங்காம்: இந்திய டெஸ்ட் அணியில் இருந்து நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா நீக்கப்பட்டதற்கு முன்னாள் வீரர்கள் பலரும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்தியாவைச் சேர்ந்த முன்னாள் வீரர்கள் மட்டுமின்றி, மற்ற நாடுகளைச் சேர்ந்த முன்னாள் வீரர்களும் இந்திய அணியின் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் எடுத்த முடிவை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வரும் நிலையில், இந்தத் தொடருக்கு முன்பே பும்ரா மூன்று போட்டிகளில் மட்டும் தான் விளையாடுவார் என்பது தீர்மானிக்கப்பட்டுவிட்டது. இது ஒருபுறம் இருக்க, இந்திய அணி முதல் டெஸ்ட் போட்டியில் ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இந்திய அணியில் பும்ரா முதல் இன்னிங்ஸில் சிறப்பாகச் செயல்பட்டு 5 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார்.

இந்திய அணியின் பந்துவீச்சு கவலைக்கிடமாக இருக்கும் நிலையில், இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளராக இருக்கும் பும்ராவை இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாட வைக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. அதற்கு ஏற்ப முதல் டெஸ்ட் போட்டிக்கும் இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கும் இடையே ஒரு வாரத்திற்கும் மேல் கால அவகாசம் இருந்தது. ஆனால், இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பும்ரா விளையாடவில்லை. அவருக்கு ஓய்வு அளிக்கப்பட்டிருப்பதாக இந்திய அணி சார்பில் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்திய அணி முதல் போட்டியில் தோல்வியடைந்து பின்னடைவைச் சந்தித்து இருக்கும் நிலையில், பும்ராவை ஆட வைக்காதது முட்டாள்தனமானது என்றும், தங்கள் கால்களில் தாங்களே சுட்டுக் கொள்வது போன்றது என்றும் முன்னாள் வீரர்கள் டேல் ஸ்டெய்ன் மற்றும் டேவிட் லாய்ட் ஆகியோர் கடுமையாக விமர்சித்து இருக்கின்றனர்.
இது குறித்து டேல் ஸ்டெய்ன் வெளியிட்டுள்ள பதிவில், "போர்ச்சுகல் (கால்பந்து) அணியின் சிறந்த வீரராக ரொனால்டோ இருக்கிறார். அவரை அந்த அணி விளையாட வைக்கவில்லை. அது முட்டாள்தனம். அதேபோல இந்திய அணியில் பும்ரா சிறந்த வீரராக இருக்கிறார். அவரை இந்திய அணி விளையாட வைக்கவில்லை," என்று குறிப்பிட்டிருக்கிறார்.
டேவிட் லாய்ட் இது பற்றிப் பேசுகையில், "ஜஸ்பிரித் பும்ரா உலகின் சிறந்த வேகப்பந்துவீச்சாளராக இருக்கிறார். உங்கள் அணி பின்னடைவைச் சந்தித்துள்ளது. மேலும், ஒரு வார கால அவகாசமும் இருந்துள்ளது. எப்படியும் அவர் உடல் தகுதியோடும், அடுத்த போட்டியில் விளையாடுவதற்குத் தயாராகவும் இருப்பார். ஆனால், அவர் விளையாடவில்லை என்றால் இதன் பின்னணியில் என்ன நடக்கிறது என்று பார்க்க வேண்டும்.
ஜஸ்பிரித் பும்ராதான் இந்த போட்டியில் விளையாடாமல், லார்ட்ஸில் நடைபெறும் மூன்றாவது போட்டியில் விளையாடுகிறேன் என்று கூறினாரா? அல்லது இந்திய அணியின் மருத்துவர்கள் அவர் விளையாடுவதற்கு இன்னும் தயாராகவில்லை என்று சொன்னார்களா? இது மர்மமாகவே உள்ளது," என்றார்.
மேலும், "நான் பழைய காலத்து ஆள். ஒரு கிரிக்கெட் வீரர் தொடர்ந்து கிரிக்கெட் விளையாட வேண்டும் என்பதுதான் எனது புரிதல். இந்திய அணியில் சில மாற்றங்களையும் செய்திருக்கிறார்கள். இரண்டாவது போட்டியை டிரா செய்துவிட்டு லார்ட்ஸ் மைதானத்திற்குச் செல்லும் போது 0 - 1 என்ற நிலையில் செல்வதற்கு அவர்கள் முடிவு செய்திருக்கிறார்கள் என்று நினைக்கிறேன்.
அவர்கள் அணியில் பின்வரிசை பேட்ஸ்மேன்களின் எண்ணிக்கையை அதிகரித்திருக்கிறார்கள். நீங்கள் அதிக அளவில் பேட்ஸ்மேன்களின் எண்ணிக்கையை அதிகரித்தால், நீங்கள் போட்டியை டிரா செய்வதில் மகிழ்ச்சி அடைகிறீர்கள் என்று அர்த்தம். போட்டி துவங்குவதற்கு முன்பே நீங்கள் இந்த மனநிலையில் இருந்தீர்கள் என்றால், உங்கள் காலில் நீங்களே சுட்டுக் கொள்கிறீர்கள் என்பதைப் போலத்தான் இது," என்று டேவிட் லாய்ட் குறிப்பிட்டு இருக்கிறார்.