மும்பை: இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா, இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஐந்து போட்டிகளில் மூன்று டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாடுவார் என்ற முடிவு, ஐந்து மாதங்களுக்கு முன்பே, அதாவது 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு முன்பே எடுக்கப்பட்டதாக இந்திய அணியின் முன்னாள் வலிமை மற்றும் கண்டிஷனிங் பயிற்சியாளர் சோஹம் தேசாய் தெரிவித்துள்ளார்..
கடந்த ஜனவரியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரின் ஐந்தாவது போட்டியில், பும்ரா தனது உச்சகட்ட ஃபார்மில் இருந்தார். அப்போது, அவர் முதுகுத்தண்டில் கடுமையாக காயம் அடைந்தார். அதன் காரணமாக, சாம்பியன்ஸ் டிராபி உட்பட அடுத்த மூன்று மாத சர்வதேசப் போட்டிகளில் அவர் பங்கேற்கவில்லை. பும்ரா இல்லாமலேயே இந்தியா சாம்பியன்ஸ் டிராபியை வென்றது குறிப்பிடத்தக்கது.

காயத்திலிருந்து மீண்ட பும்ரா, ஐபிஎல் போட்டிகளில் சில ஆரம்ப ஆட்டங்களைத் தவிர்த்து, மற்ற அனைத்துப் போட்டிகளிலும் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடினார். ஐபிஎல் தொடரின் போதே, தேர்வுக் குழு தலைவர் அஜித் அகர்கர், பும்ரா மூன்று அல்லது நான்கு டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாடுவார் என்பதை உறுதிப்படுத்தினார். பின்னர், தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர், கேப்டன் சுப்மன் கில் மற்றும் பும்ரா ஆகியோர் ஹெடிங்லியில் நடந்த முதல் டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக இதை மீண்டும் உறுதிப்படுத்தினர்.
பும்ரா சாம்பியன்ஸ் டிராபியில் பங்கேற்க முடியாதபோது, இந்தியாவின் எதிர்கால கிரிக்கெட் தொடர் அட்டவணை விரிவாக ஆய்வு செய்யப்பட்டு, இங்கிலாந்தில் பும்ரா எத்தனை போட்டிகளில் ஆட வேண்டும் என்பது முடிவு செய்யப்பட்டது. அதன்படி இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் அவர் மூன்று டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாடுவார் என்றும் அப்போதே முடிவு செய்யப்பட்டது.
ஒரு வீரரின் பணிச்சுமை மற்றும் ஓய்வுத் தேவைகளை அணி எவ்வாறு மதிப்பிடுகிறது என்பதையும் சோஹம் தேசாய் விளக்கினார். "பணிச்சுமையை பகுப்பாய்வு செய்ய இரண்டு வழிகள் உள்ளன. அணியின் ஜிபிஎஸ் கருவிகள் மூலம் தரவுகளைச் சேகரிப்பது ஒரு வழி. பந்துவீச்சாளரின் நடத்தையை உன்னிப்பாகக் கவனிப்பது மற்றொரு வழி. ஒவ்வொரு வீரரும் அவ அவருடைய உச்ச செயல்திறனில் இருக்கும்போது இயல்பான' நடத்தைக்கான சில அளவுகோல்கள் நிர்ணயம் செய்யப்படும்.".
"ஒரு பந்துவீச்சாளர் வித்தியாசமாக நடப்பது அல்லது அணி பேருந்தில் சக வீரர்களுடனான எளிய உரையாடல்களில் கூட தீவிரம் குறைவது போன்ற அறிகுறிகள் தென்பட்டால், அவை எச்சரிக்கை அளிக்கும் விஷயங்களாக மாறும்." என்றும் சோஹம் தேசாய் இது பற்றி விளக்கினார்.
இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்தியா 1-0 என பின்தங்கியுள்ள நிலையில், பும்ரா எட்ஜ்பாஸ்டனில் நடைபெறும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாடுவாரா என்பது குறித்து சந்தேகங்கள் நிலவுகின்றன. இந்திய அணியின் உதவி பயிற்சியாளர் ரியான் டென் டோஷ்கேட், இது குறித்து இன்னும் முடிவெடுக்கப்படவில்லை என்று கூறி உள்ளார்.