பிர்மிங்காம்: இந்திய டெஸ்ட் அணியின் முன்னணி வேகப்பந்துவீச்சாளரான ஜஸ்பிரித் பும்ரா, இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாடவில்லை. அவருக்கு ஓய்வு அளிக்கப்பட்டு இருக்கிறது. இந்தத் தொடரில் முதல் டெஸ்ட் போட்டியில் மட்டுமே விளையாடி அவருக்கு அடுத்த டெஸ்ட் போட்டியின் போது ஓய்வு அளிக்கப்பட்டு இருக்கிறது. இந்தத் தொடரின் 5 போட்டிகளில் அவர் மூன்று போட்டிகளில் தான் விளையாடுவார். இடையிடையே அவருக்கு ஓய்வளிக்கப்படும் எனவும் கூறப்பட்டிருக்கிறது.
இது முன்னாள் வீரர்கள் மத்தியில் விமர்சனத்திற்கும் உள்ளாகி இருக்கிறது. ஜஸ்பிரித் பும்ராவால் பந்து வீச முடியும் என்றால் அவர் எதற்காக ஓய்வு எடுக்க வேண்டும் எனக் கேள்வி எழுப்பி உள்ளனர். குறிப்பாக முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் இது பற்றி பலமுறை பேசியிருந்தார்.
தற்போது அவர் கபில் தேவ் எவ்வாறு முந்தைய காலகட்டங்களில் ஓய்வெடுக்காமல் நீண்ட காலம் இந்திய அணிக்காக தொடர்ந்து போட்டிகளில் விளையாடினார் என்பது பற்றி விவரித்தார்.

கபில் தேவின் பயிற்சி முறையை சுட்டிக்காட்டி கவாஸ்கர் பேசியதாவது: "அவர்கள் அப்போது எப்படி ஓய்வெடுக்காமல் விளையாடினார்கள்? அப்போது இருந்த பயிற்சி முறை வேறு. கபில் தேவ், உடற்பயிற்சி மையங்களுக்கு மிகவும் அரிதாகவே சென்றார். அவர் எப்போதும் ஓடுவார், ஓடுவார், ஓடிக்கொண்டே இருப்பார். ஐந்து அல்லது ஆறு பேட்ஸ்மேன்களுக்கு வலைப்பயிற்சியில் பந்து வீசுவார். அதன் பிறகு அவர் பேட்டிங் பயிற்சி செய்ய வருவார். அதன் பிறகு மேலும் இரண்டு வீரர்களுக்கு பந்து வீசுவார். அவர் இந்த விளையாட்டு என்ன கேட்கிறதோ அதைச் செய்தார்."
"கபில் தேவ் என்ன வீரராக இருக்கிறாரோ, பந்து வீச வேண்டுமென்றால் வீசிக் கொண்டே இருக்க வேண்டும். அதன் மூலம் அவரது பந்துவீசும் தசைகள் மற்றும் ஒட்டுமொத்த உடம்பும் பந்து வீசுவதற்கு ஏற்றாற்போல மாறிவிடும். அவர் ஒரு மிகச்சிறந்த வீரர். அவர் எந்த விளையாட்டில் ஈடுபட்டிருந்தாலும் அதில் சாம்பியனாக இருந்திருப்பார். அவர் தனது விளையாட்டு என்ன எதிர்பார்க்கிறதோ அதைச் செய்தார். அது கிரிக்கெட் விளையாடுவது மற்றும் கிரிக்கெட் பயிற்சி செய்வது," என்று சுனில் கவாஸ்கர் சுட்டிக்காட்டினார்.
இதன் மூலம் தற்போது இருக்கும் கிரிக்கெட் வீரர்கள் உடற்பயிற்சி நிலையங்களில் அதிக நேரத்தைச் செலவிடுகிறார்கள். ஆனால், வலைப்பயிற்சியில் குறைந்த நேரமே செலவிடுகிறார்கள். அதனால்தான் அவர்களால் முந்தைய காலகட்டத்தைச் சேர்ந்த வீரர்களைப் போல நீண்ட காலம் காயத்தில் சிக்காமல், ஓய்வு எடுக்காமல் விளையாட முடிவதில்லை என சுனில் கவாஸ்கர் சுட்டிக்காட்டி இருக்கிறார்.