அகமதாபாத் : பார்டர் கவாஸ்கர் தொடரில் இந்திய அணி தோல்வியைத் தழுவியதன் மூலம் உலக டெஸ்ட் சாம்பியன் தொடருக்கு தகுதி பெற முடியாத நிலை ஏற்பட்டு இருந்தது. இதன் காரணமாக இந்திய அணியில் பல அதிரடி மாற்றங்களை பிசிசிஐ மேற்கொண்டுள்ளது.
குறிப்பாக கிரிக்கெட் வீரர்கள் தங்களது மனைவியை தொடர் முழுவதும் வெளிநாட்டுக்கு அழைத்துச் செல்லக்கூடாது என்று பிசிசிஐ விதிகளை மாற்றியது. ஒன்றரை மாதத்திற்கு மேல் கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்றால் அதில் 14 நாட்கள் வரை தான் மனைவியுடன் வீரர்கள் தங்கலாம் என்று அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.

இந்த சூழலில் பிசிசிஐயின் இந்த முடிவுக்கு பல வெளிநாட்டு வீரர்கள் எதிர்ப்பு தெரிவித்து இருந்தார்கள். இது தவறான நடைமுறை என்றும் அவர்கள் கூறியிருந்தனர். இந்த நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் கேப்டன் கபில்தேவ், மனைவியை கிரிக்கெட் வீரர்கள் வெளிநாட்டு தொடருக்கு அழைத்துச் செல்வது தவறு கிடையாது என்று கூறியிருக்கிறார்.
ஆனால் ஒரு சில மாற்றங்களை செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தி இருக்கிறார். இது குறித்து பேசிய அவர் ஒரு சுற்றுப்பயணம் ஒரு மாதத்திற்கு மேல் இருக்கிறது என்றால், முதல் 20 நாட்கள் குடும்பத்தினரையும் மனைவியையும் வீரர்களுடன் தங்க அனுமதிக்க கூடாது.இதன் மூலம் வீரர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து ஒரே அணியாக இருக்க முடியும்.
இதேபோன்று மூன்று மாதம் தொடர் இருந்தால் அதில் முதல் மாதத்திற்கு மனைவிகள் வீரர்களுடன் வரக்கூடாது. இதன் மூலம் அணியில் உள்ள வீரர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து பயணம் செய்வார்கள். அப்போதுதான் அணி ஒரு அணியாக இருக்கும். ஏனென்றால் கிரிக்கெட் என்பது தனி நபர்கள் விளையாடும் போட்டிகள் கிடையாது.
இது ஒரு அணியாக சேர்ந்து விளையாடும் போட்டியாகும். அதேசமயம் மனைவி மற்றும் குடும்பத்தினரின் ஆதரவு இருந்தால் ஒரு வீரரால் சிறப்பாக செயல்பட முடியும். அதற்கு முன்பு அணி வீரர்களிடையே நல்ல நட்புறவை ஏற்படுத்த வேண்டியது அவசியமாகும் என்று கபில்தேவ் கூறியுள்ளார்.