லண்டன் : இந்திய அணியின் நட்சத்திர வீரர் கேஎல் ராகுல் காயத்திற்கு சிகிச்சை பெறுவதற்காக மீண்டும் லண்டனில் முகாமிட்டுள்ளார்.
கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரின் போது கேஎல் ராகுலுக்கு காயம் ஏற்பட்டது. காலில் காயம் ஏற்பட்ட நிலையில், பின்னர் தொடை பகுதியிலும் பாதிப்பு ஏற்பட்டது. இதற்காக லண்டனில் கேஎல் ராகுலுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு, கிட்டத்தட்ட 6 மாத ஓய்வுக்கு பின் ஆசிய கோப்பை தொடரில் களமிறங்கினார். முதல் போட்டியில் சதமடித்து அசத்திய அவர், உலகக்கோப்பை தொடரிலும் அட்டகாசமான ஃபார்மில் ரன்களை சேர்த்தார்.

அதுமட்டுமல்லாமல் விக்கெட் கீப்பராகவும் கேஎல் ராகுல் சிறப்பாக செயல்பட, அவர் டிஆர்எஸ் தேர்விலும் ரோகித் சர்மாவுக்கு முழு நம்பிக்கை ஏற்பட்டது. அதேபோல் தென்னாப்பிரிக்கா டெஸ்ட் தொடரிலும் சதம் விளாசி கேஎல் ராகுல் தனது இடத்தை பிடித்து கொண்டார். இதனால் இந்திய அணியின் மிடில் ஆர்டரில் கேஎல் ராகுலின் இடம் நிரந்தரமானதாக பார்க்கப்பட்டது. ஏனென்றால் டெக்னிக்கலாகவும் கேஎல் ராகுல் சிறந்த பேட்ஸ்மேன் என்பதால், இந்திய ரசிகர்கள் பலரும் வரவேற்றனர்.
இந்த நிலையில் இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டிக்கு பின் கேஎல் ராகுல் காயம் காரணமாக விலகினார். இதுகுறித்து பிசிசிஐ தரப்பில், கேஎல் ராகுலுக்கு சிறிய காயம் தான் என்பதால் விரைவில் இந்திய அணிக்கு திரும்புவார் என்று அறிவிக்கப்பட்டது. அதற்கேற்ப இங்கிலாந்து அணிக்கு எதிரான கடைசி 3 டெஸ்ட் போட்டிகளுக்கான அணியிலும் கேஎல் ராகுல் தேர்வு செய்யப்பட்டார். அதேபோல் 4வது போட்டிக்கு முன்பாக கேஎல் ராகுல் 90 சதவிகிதம் ஃபிட்னஸை எட்டிவிட்டதாக கூறப்பட்டது.
ஆனாலும் 4வது டெஸ்ட் போட்டியிலும் கேஎல் ராகுல் களமிறங்கவில்லை. இந்த நிலையில் கேஎல் ராகுல் லண்டனில் முகாமிட்டுள்ளது தெரிய வந்துள்ளது. இதுகுறித்து என்சிஏ தரப்பில் பேசுகையில், கேஎல் ராகுல் காயமடைந்த பின் அவருக்கான சிகிச்சைகள் அளிக்கப்பட்டன. 4வது டெஸ்ட் போட்டிக்கு முன் அவர் 90 சதவிகிதத்திற்கும் அதிக ஃபிட்னஸை எட்டியது உண்மை தான். ஆனால் கேஎல் ராகுல் அறுவை சிகிச்சை செய்யப்பட்ட தொடை பகுதியில் பிரச்சனையை உணர்வதாக கூறினார்.
இதன்பின் அவருக்கு ஸ்கேன் சோதனைகள் செய்து பார்த்தபோது, எங்களால் எதையும் கண்டுபிடிக்க முடியவில்லை. பின்னர் அந்த ஸ்கேன் சோதனைகளை லண்டனில் கேஎல் ராகுலுக்கு அறுவை சிகிச்சை செய்த மருத்துவருக்கு அனுப்பினோம். இதனால் கேஎல் ராகுல் லண்டனுக்கு சென்றுள்ளார். மார்ச் 2ஆம் தேதி கேஎல் ராகுலின் மற்ற ஸ்கேன் ரிப்போர்ட்கள் லண்டன் மருத்துவருக்கு கிடைக்கும். அதன்பின்னர் முழு விவரங்கள் தெரிய வரும் என்று கூறப்பட்டுள்ளது.
ஒவ்வொரு ஆண்டிலும் பாதி மாதங்கள் கேஎல் ராகுல் காயம் காரணம் காரணமாக ஓய்வில் இருப்பது வழக்கமாகி வருகிறது. இந்திய அணியின் கேப்டனுக்கான ரேஸில் இருந்த கேஎல் ராகுல் காயம் காரணமாக நீண்ட காலமாக ஓய்வில் இருந்ததால், துணை கேப்டன் பதவியை ஹர்திக் பாண்டியாவிடம் இழந்தது குறிப்பிடத்தக்கது.