லண்டன்: இந்தியா-இங்கிலாந்து இடையேயான ஓவல் டெஸ்ட் போட்டி, இரு அணிகளின் வீரர்களுக்கு மட்டுமல்ல, களத்தில் இருந்த அம்பயர் குமார் தர்மசேனா-வுக்கும் ஒரு மறக்க முடியாத அனுபவமாக அமைந்திருக்கிறது. போட்டி முடிந்ததும், "ஒரு சிறந்த டெஸ்ட் தொடரை மிக அருகில் இருந்து பார்க்கும் அதிர்ஷ்டம் எனக்கு கிடைத்தது" என்று தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பெருமிதத்துடன் பதிவிட்டிருந்தார் தர்மசேனா.
அவர் சொல்வது உண்மைதான். 6 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி, கடைசி 57 நிமிடங்களில் சரிந்த 4 விக்கெட்டுகள் என ஓவல் டெஸ்ட் ஒரு சரித்திர நிகழ்வு. இப்படிப்பட்ட போட்டியை அம்பயர் இருக்கையில் இருந்து பார்ப்பது நிச்சயம் ஒரு பாக்கியம்தான். ஆனால், ஒருபக்கம் அவர் போட்டியை ரசித்தாலும், மறுபக்கம் இதே தொடரில் அவர் எடுத்த முடிவுகளும், இந்திய வீரர்களுடன் அவர் நடத்திய வாக்குவாதங்களும் தான் இப்போது சமூக வலைதளங்களில் விவாதமாக மாறியுள்ளது. அவர் வெளியிட்ட இந்த "அதிர்ஷ்ட" பதிவின் கீழேயே அவரை விமர்சித்து இருக்கின்றனர் ரசிகர்கள்.

இந்தியா - இங்கிலாந்து தொடர் முழுவதும் குமார் தர்மசேனா-வின் அம்பயர் பணி பலத்த விமர்சனங்களுக்கு உள்ளானது. குறிப்பாக ஐந்தாவது டெஸ்டில் அவர் சிக்கிய சர்ச்சைகள் ஏராளம்.
சாய் சுதர்ஷன் விக்கெட்டில் சர்ச்சை: போட்டியின் முதல் நாள், இந்திய வீரர் சாய் சுதர்ஷன்-னுக்கு எதிராக இங்கிலாந்து அணி எல்.பி.டபிள்யூ அப்பீல் செய்தது. அப்போது, அவுட் இல்லை எனத் தலையசைத்த தர்மசேனா, டி.ஆர்.எஸ் எடுப்பதற்கான 15 வினாடிகள் முடிவதற்குள், பந்து பேட்டில் பட்டது போல தனது விரல்களால் சைகை காட்டினார்.
விதிகளின்படி, அம்பயர்கள் ரிவ்யூ நேரம் முடிவதற்குள் எந்தவிதமான சைகையையும் காட்டக்கூடாது. தர்மசேனா-வின் இந்த செயலால், தங்களது ரிவ்யூவை இங்கிலாந்து அணி வீணடிக்காமல் காப்பாற்றிக் கொண்டது. இது இங்கிலாந்துக்குச் சாதகமாக அமைந்ததாக முன்னாள் வீரர் சஞ்சய் பங்கர் உட்பட பலரும் கடுமையாக விமர்சித்தனர்.
கே.எல். ராகுலுடன் வாக்குவாதம்: போட்டியின் இரண்டாம் நாள், இந்திய பந்துவீச்சாளர் பிரசித் கிருஷ்ணா மற்றும் இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் இடையே வார்த்தைப் போர் மூண்டது. அப்போது குறுக்கிட்ட தர்மசேனா, வீரர்களை அமைதியாக இருக்கும்படி கூறினார். இதனால் கோபமடைந்த கே.எல். ராகுல், தர்மசேனா-விடம் சென்று, "நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்கள்? அமைதியாக பேட்டிங், பவுலிங் செய்துவிட்டு வீட்டிற்கு செல்ல வேண்டுமா?" என்று கோபமாக கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த தர்மசேனா, "இப்படி பேசக்கூடாது ராகுல், இதுபற்றி போட்டி முடிந்ததும் பேசிக்கொள்ளலாம்" என்று எச்சரித்தார். இந்த வாக்குவாதம் மைதானத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
குமார் தர்மசேனா சர்ச்சைகளில் சிக்குவது இது முதல் முறையல்ல. 2019 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில், பென் ஸ்டோக்ஸ் பேட்டில் பட்டு பவுண்டரி சென்ற ஓவர்-த்ரோவிற்கு, விதிகளை மீறி 6 ரன்கள் கொடுத்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பின்னர் அந்த முடிவை எடுத்தது தவறு என்று அவரே ஒப்புக்கொண்டார். அதேபோல, இந்தத் தொடரிலும் அவரது முடிவுகள் பலமுறை டி.ஆர்.எஸ் மூலம் மாற்றப்பட்டன.
ஒருபுறம், ஒரு கிரிக்கெட் ரசிகராக டெஸ்ட் போட்டியின் அழகையும், போராட்ட குணத்தையும் தர்மசேனா பாராட்டுவது வரவேற்கத்தக்கது. ஆனால் மறுபுறம், ஒரு சர்வதேச நடுவராக அவரது முடிவுகளின் தரம் தொடர்ந்து கேள்விக்குறியாகவே உள்ளது. "அம்பயர்களும் மனிதர்கள்தானே, தவறுகள் நடப்பது இயல்பு" என்று கூறப்பட்டாலும், ஒரு போட்டியின் முடிவையே மாற்றக்கூடிய தவறுகள் மீண்டும் மீண்டும் நடக்கும்போது, அது கவலையளிக்கிறது.
டி.ஆர்.எஸ் (DRS) என்ற தொழில்நுட்பம் இல்லாதிருந்தால், தர்மசேனா-வின் பல தவறான முடிவுகளால் இந்திய அணி பாதிக்கப்பட்டிருக்கும் என்பது ரசிகர்களின் ஆதங்கமாக உள்ளது. தர்மசேனா போட்டியை அருகில் இருந்து ரசித்தாரோ இல்லையோ, இந்திய ரசிகர்கள் ஒவ்வொரு முறையும் அவர் விரலைத் தூக்கும் போதும், தலையசைக்கும் போதும் டி.ஆர்.எஸ்-ஐ நம்பிக்கொண்டுதான் போட்டியைப் பார்த்தார்கள் என்பதே நிதர்சனம்.