மான்செஸ்டர்: இங்கிலாந்துக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில், இந்திய அணி 100 ரன்களுக்குள் சுருண்டுவிடும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கே.எல். ராகுல் மற்றும் சுப்மன் கில் ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி இங்கிலாந்து பந்துவீச்சாளர்களை வெறுப்பேற்றியது. இந்த ஜோடியின் பார்ட்னர்ஷிப் இந்திய அணிக்கு புதிய நம்பிக்கையை அளித்துள்ளது.
முதல் இன்னிங்சில் இந்திய அணி 358 ரன்கள் எடுத்திருந்த நிலையில், இங்கிலாந்து அணி ஜோ ரூட் (150 ரன்கள்) மற்றும் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் (141 ரன்கள்) ஆகியோரின் அபார சதத்தால் 669 ரன்கள் குவித்து, 311 ரன்கள் முன்னிலை பெற்றிருந்தது.

இதையடுத்து, இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணிக்கு முதல் ஓவரிலேயே அதிர்ச்சி காத்திருந்தது. கிறிஸ் வோக்ஸ் வீசிய அடுத்தடுத்த பந்துகளில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் சாய் சுதர்சன் டக் அவுட் ஆகி வெளியேறினர். ஒரு ரன் கூட எடுக்காத நிலையில் 2 விக்கெட்டுகளை இழந்ததால், இந்திய அணி இன்னிங்ஸ் தோல்வியை நோக்கி செல்கிறதோ? என ரசிகர்கள் கவலை அடைந்தனர்.
ஆனால், மூன்றாவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த கே.எல். ராகுல் மற்றும் சுப்மன் கில், இந்திய அணியை மீட்டனர். இங்கிலாந்து பந்துவீச்சாளர்களின் வேகத்தையும், ஸ்விங்கையும் மிகத் திறமையாக எதிர்கொண்ட இந்த ஜோடி, நிதானமாகவும், அதே சமயம் நேர்த்தியாகவும் ரன்களை சேர்த்தது.
நான்காம் நாள் ஆட்ட நேர முடிவில், இந்த ஜோடி அவுட் ஆகாமல் 174 ரன்கள் குவித்தது. கே.எல். ராகுல் 210 பந்துகளில் 87 ரன்களுடனும், சுப்மன் கில் 167 பந்துகளில் 78 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இந்த ஜோடி இதுவரை 373 பந்துகளை எதிர்கொண்டுள்ளது, இது அவர்களின் பொறுமையான ஆட்டத்தை காட்டுகிறது.
குறிப்பாக, இந்த ஜோடியின் கட்டுப்பாட்டு சதவீதம் (Control Percentage) அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. சுப்மன் கில் 92% மற்றும் கே.எல். ராகுல் 90% கட்டுப்பாட்டுடன் பேட்டிங் செய்தது, இங்கிலாந்து பந்துவீச்சாளர்களுக்கு எந்தவொரு வாய்ப்பையும் கொடுக்கவில்லை என்பதை காட்டுகிறது.
வெளிநாட்டு மண்ணில், அதுவும் இக்கட்டான சூழ்நிலையில், இந்த ஜோடியின் ஆட்டம் கிரிக்கெட் வல்லுநர்கள் மற்றும் முன்னாள் வீரர்கள் மத்தியில் பெரும் பாராட்டைப் பெற்றுள்ளது. பயிற்சியாளர் கவுதம் கம்பீர் முதல் மைதானத்தில் இருந்த இங்கிலாந்து ரசிகர்கள் வரை பலரும் இந்த ஜோடியின் போராட்ட குணத்தைப் பாராட்டி ஆட்ட நேர முடிவில் எழுந்து நின்று கரகோஷம் எழுப்பினர். சேனா (SENA) நாடுகளில் இந்திய டெஸ்ட் வரலாற்றில் இது ஒரு மறக்க முடியாத பார்ட்னர்ஷிப்பாகக் கருதப்படுகிறது.
100 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகிவிடும் என்று கணிக்கப்பட்ட இந்திய அணி, தற்போது கில் - ராகுல் ஜோடியின் அபார ஆட்டத்தால் போட்டியில் மீண்டும் ஒரு போராட்டத்தை வெளிப்படுத்தி, இங்கிலாந்து அணிக்கு பெரும் சவாலாக மாறியுள்ளது.