தரம்சாலா : இங்கிலாந்து அணி விளையாடும் வரும் பேஸ்பால் ஆட்ட முறைக்கான புதிய விளக்கத்தை அந்த அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் தெரிவித்துள்ளார்.
இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அணி 4-1 என்ற கணக்கில் மோசமான தோல்வியை அடைந்துள்ளது. கடைசி டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி இன்னிங்ஸ் மற்றும் 64 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது பல்வேறு தரப்பினருக்கும் அதிர்ச்சியை கொடுத்தது. ஏனென்றால்ன் பேஸ்பால் அணுகுமுறையுடன் விளையாடி வரும் இங்கிலாந்து அணி, முதல்முறையாக இன்னிங்ஸ் தோல்வி அடைந்துள்ளது.

இந்த தோல்விக்கு இங்கிலாந்து அணி வீரர்களின் திறமையின்மையே காரணமாக பார்க்கப்படுகிறது. இந்திய மைதானங்களில் விளையாடும் அளவிற்கு பேட்டிங் திறமையை வளர்த்து கொள்ளாமல் மோசமாக ஆட்டமிழந்ததே தோல்விக்கு காரணம் என்று விமர்சிக்கப்படுகிறது. இந்த தோல்வி குறித்து இங்கிலாந்து அணி கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பேசுகையில், இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர் நிறைவடைந்துள்ளது. இந்த தொடரின் போதே நாள், சிறந்த அணியால் வீழ்த்தப்பட்டுள்ளோம் என்று கூறிவிட்டேன்.
அடுத்ததாக பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கிறோம். மீண்டும் இங்கிலாந்து அணியை வழிநடத்த போவதில் ஆவலாக உள்ளேன். இந்த டெஸ்ட் தொடரில் தோல்வியடைந்ததால், கடந்த 2 ஆண்டுகளாக விளையாடிய ஆட்டத்தை கைவிடப் போவதில்லை. இந்த டெஸ்ட் தொடரை ஒட்டுமொத்தமாக பார்த்தீர்கள் என்றால், இங்கிலாந்து அணி முக்கியமான தருணங்களில் மட்டுமே கோட்டைவிட்டுள்ளது. அந்த தருணங்களில் சிறப்பாக செயல்பட்டிருந்தால், ஆட்டம் மாறியிருக்கும்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆட்டம் ஒரு செஷனில் மாறிவிடும். இங்கிலாந்து அணி வீரர்கள் அனைவருக்கும் தங்களின் ஆட்டம் எங்கு மாறியது என்பது தெரியும். அஸ்வின், ஜடேஜா மற்றும் குல்தீப் யாதவ் போன்ற தரமான பவுலர்கள் இருக்கும் போது, எத்தனை பேட்ஸ்மேன்கள் வந்தாலும் அவுட் செய்ய முடியும். சில நேரங்களில் ரிஸ்க் எடுக்கும் போது, எங்களுக்கு எதிராகவே திரும்ப வாய்ப்புள்ளது. ஜாக் கிராலி - டக்கெட் பார்ட்னர்ஷிப், டாம் ஹார்ட்லி மற்றும் சோயப் பஷீர் ஆகியோர் இந்த தொடரில் சிறப்பாக செயல்பட்டுள்ளார்கள்.
தொடர்ந்து, பேஸ்பால் என்ற பெயரை மீடியாக்கள் தான் வைத்தன. ஒவ்வொரு தனி நபரும் பேஸ்பால் குறித்து ஒவ்வொரு விளக்கம் கொடுக்கிறார்கள். எனது பார்வையில் பேஸ்பால் என்றால், கிரிக்கெட் வீரர்கள் அடுத்தக்கட்ட முன்னேற்றத்தை அடைவது தான் பேஸ்பால். தோல்வியின் போது, சிறந்த வீரராக மாறுவதற்கான ஊக்கத்தையும் அளிப்பது தான் பேஸ்பால். நாம் நினைப்பதை விடவும் அதிக முன்னேற்றத்தை எட்ட வைப்பதே என்று சொல்வேன் என தெரிவித்துள்ளார்.
இத்தனை நாட்களாக பேஸ்பால் என்றால் அட்டாக்கிங் கிரிக்கெட்டை விளையாடுவது, வெற்றி மற்றும் தோல்வியை பற்றி கவலையின்றி விளையாடுவது, மக்களுக்கு மகிழ்ச்சியை தரும் ஆட்டத்தை வெளிப்படுத்துவது என்று வித்தியாச வித்தியாசமாக இங்கிலாந்து அணி உருட்டி வந்தது. தற்போது இந்திய மண்ணில் தோல்வியடைந்த பின், புதிய விளக்கத்தை கொடுத்து அனைவரையும் மிரள வைத்துள்ளார் பென் ஸ்டோக்ஸ்.