லண்டன்: இந்திய அணியின் நட்சத்திர வீரரான ஜஸ்பிரிட் பும்ரா விளையாடாத போட்டிகளில் முகமது சிராஜ் பொறுப்பை உணர்ந்து மிகச்சிறப்பாக பவுலிங் செய்து வருவது தொடர்கதையாகி இருக்கிறது. அதற்கேற்ப இந்தப் போட்டியில் போப், ஜோ ரூட் மற்றும் பெத்தல் ஆகிய மூவரையும் வீழ்த்தி அசத்தி இருக்கிறார்.
இங்கிலாந்து அணிக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் இந்திய அணி விளையாடி வருகிறது. இந்தப் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 224 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டாகியது. இதன்பின் களமிறங்கிய இங்கிலாந்து அணி உணவு இடைவேளைக்கு முன்பாக ஒரு விக்கெட் இழப்பிற்கு 109 ரன்களை எடுத்திருந்தது. இதனால் இந்திய அணியின் பவுலிங் மீது விமர்சனங்கள் எழுந்தன.

ஆனால் 2வது செஷனில் இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர்கள் விஸ்வரூபம் எடுத்தனர். அதிலும் முகமது சிராஜ் தொடர்ச்சியாக 8 ஓவர்களை வீசி 35 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதிலுல் போப், ஜோ ரூட் மற்றும் ஜேக்கப் பெத்தல் ஆகிய மூவரையும் வீழ்த்தி இந்திய அணியின் கம்பேக்கிற்கு காரணமாக அமைந்தார்.
இதன்பின் பிரசித் கிருஷ்ணாவும் சிறப்பாக பவுலிங் செய்ய, இங்கிலாந்து அணி 215 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்திருந்தது. இதனால் முகமது சிராஜை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். அதேபோல் பும்ரா விளையாடும் போது சிராஜ் இப்படியான ஆட்டத்தை கன்சிஸ்டன்சியுடன் வெளிப்படுத்துவதில்லை. ஆனால் பும்ரா விளையாடாத போட்டிகளில் மட்டும் சிராஜின் பவுலிங் நெருப்பாக அமைந்து வருகிறது.
இந்தப் போட்டியில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தியதோடு மட்டுமல்லாமல், 2வது டெஸ்ட் போட்டியிலும் ஒரே இன்னிங்ஸில் 6 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். அதுமட்டுமல்லாமல் ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரின் போதும் பும்ரா காயம் அடைந்து மருத்துவமனைக்கு சென்றபின், இரு இன்னிங்ஸிலும் சேர்த்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.
இதனால் முகமது சிராஜ்-க்கு எப்போதெல்லாம் பொறுப்பு கூடுகிறதோ, அப்போதெல்லாம் பொறுப்பை உணர்ந்து அசத்தலாக பவுலிங் செய்து வருவதாக ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். இதனால் பும்ரா விளையாடும் போதும் சிராஜ்-க்கு தேவையாக ஊக்கத்தை இந்திய அணி அளித்தால், பும்ராவின் பணிச்சுமையும் குறையும் என்று பார்க்கப்படுகிறது.