லண்டன்: விளையாட்டு வீரர்களின் வாழ்க்கை எப்போதும் ஏற்ற இறக்கத்துடன் இருக்கும் அதற்கு கொஞ்சமும் விதிவிலக்கு இல்லாமல் இருப்பவர்தான். இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் முகமது சிராஜ் ஐபிஎல் மூலம் அடையாளம் காணப்பட்டு இந்திய அணியில் இடம் பிடித்து சிராஜ் உள்ளே வெளியே என இந்திய அணியில் நிரந்தர இடம் கிடைக்காமல் இருந்தார்.
ஆனால் அதன்பின் முகமது சிராஜ் தன்னுடைய பந்துவீச்சு பலத்தை அதிகரித்துக் கொண்டு சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட்டில் நம்பர் ஒன் பவுலராக வலம் வந்தார். ஆனால் இந்த மகிழ்ச்சி கொஞ்சம் கூட சிராஜுக்கு நிலைத்து நிற்கவில்லை.

உடனே காயம், அணியில் இடம் இல்லை போன்ற பல பிரச்சனைகள் சிராஜிக்கு வந்தது. எனினும் அதில் இருந்து மீண்டு சிராஜ் வந்து டெஸ்ட் கிரிக்கெட்டில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார். இந்த கட்டத்தில் தான் சிராஜ் பழைய பந்தை வைத்து சரியாக பந்து வீசுவதில்லை என்று அவர் மீது புகார் எழுந்தது. இதனை வெளிப்படையாகவே கேப்டன் ரோகித் சர்மா கூறி அவரை அவமானப்படுத்தினார்.
சாம்பியன்ஸ் கோப்பையிலிருந்து நீக்கம்:
இதனை காரணம் காட்டி சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் சிராஜை பிசிசிஐ அதிரடியாக நீக்கியது. ஆனால் இது குறித்து கொஞ்சம் கூட கவலைப்படாத சிராஜ் மீண்டும் தம்மால் சாதிக்க முடியும் என்பதை காட்டினார். அணியில் இடமில்லை என்று சோகத்துடன் உட்காராமல் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் கவனம் செலுத்தினார். ரஞ்சி கோப்பை கிரிக்கெட்டில் விளையாடிய சிராஜ், தான் என்ன தவறு செய்கின்றோம்? பந்துவீச்சில் என்ன முன்னேற்றத்தை காண வேண்டும் என்பதை கற்றுக் கொண்டார்.
அதன் பின் ஐபிஎல் தொடரில் சிராஜ் சிறப்பாக செயல்பட்டதில் இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் சிராஜுக்கு மீண்டும் இடம் கிடைத்தது. இதில் பும்ரா உடல் தகுதி பிரச்சனை காரணமாக ஐந்து டெஸ்ட் போட்டிகளிலும் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் இந்திய பந்து வீச்சின் தலைவர் என்ற பொறுப்பு சிராஜுக்கு வந்தது. ஐந்து டெஸ்ட் போட்டிகளிலும் சிறப்பாக பந்து வீசிய சிராஜ் மொத்தமாக 185 ஓவருக்கு மேல் வீசி இருக்கின்றார்.
மீண்டும் ஹீரோவான முகமது சிராஜ்:
இதில் 23 விக்கெட்டுகள் அடங்கும். பும்ரா இல்லாமல் இந்திய அணி என்ன செய்யப் போகிறது என ஏக்கத்தில் இருந்த ரசிகர்களுக்கு நான் இருக்கின்றேன் என்று தனது பந்துவீச்சு மூலம் நம்பிக்கை கொடுத்தார் சிராஜ். பும்ரா இல்லாத இரண்டு டெஸ்ட்களில் இந்திய அணி சிராஜின் அபார பந்துவீச்சால் வெற்றி பெற்றது. இதன் மூலம் ஒரே டெஸ்டில் இந்தியாவின் நம்பர் ஒன் டெஸ்ட் பவுலர் என்ற பெயரை பெற்றார். கடந்த பிப்ரவரி மாதம் அணியை விட்டு நீக்கப்பட்ட சிராஜ் தற்போது இந்தியாவின் நம்பர் ஒன் வீரராக மாறியதற்கு அவருடைய கடும் உழைப்பும் விடாமுயற்சியும் மட்டுமே காரணம்.