லண்டன்: இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பும்ரா இல்லாத போது எல்லாம் இந்திய அணி பந்துவீச்சை சிறப்பாக செயல்பட்டிருக்கிறது. குறிப்பாக பும்ரா இல்லாமல் சிராஜ் நல்ல முறையில் பந்துவீசி அதிக விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கின்றார்.
மேலும் ரன்களையும் குறைவாக விட்டுக் கொடுத்திருக்கின்றார். இது குறித்து தமிழக வீரர் தினேஷ் கார்த்திக், முகமது சிராஜிடம் நடத்திய நேர்காணலில் எப்படி பும்ரா இல்லாமல் மட்டும் நீங்கள் சிறப்பாக பந்து வீசுகிறீர்கள் என்று கேள்வி கேட்டார்.

அதற்கு பதில் அளித்த சிராஜ், எனக்கு பொறுப்புகளை ஏற்றுக் கொள்வது மிகவும் பிடிக்கும்.பும்ரா இல்லாதது எங்களுக்கு ஒரு குறை தான். நான் அவரை மிகவும் மிஸ் செய்கிறேன். எங்கள் அணியின் சீனியர் வீரர் அவர் இல்லாத போது எனக்கு கூடுதல் பொறுப்பு இருக்கின்றது. அதை நான் மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்கின்றேன்.
அதை நான் மனம் விரும்பி செய்கின்றேன். பொறுப்புகள் அதிகரிப்பதால் எனக்கு நெருக்கடிகள் எதுவும் ஏற்படுவதில்லை. நான் எப்போதுமே என்னுடைய திட்டத்தை சிம்பலாக தான் வைத்துக் கொள்வேன். பும்ரா இருந்தால் எந்தெந்த வீரருக்கு எப்படி பந்து வீசவேண்டும் என்று அவரே சொல்லித் தருவார்.
அவர் இல்லாத போது அதை நாங்கள் செய்ய வேண்டும் என்று சிராஜ் கூறினார். இதனை தொடர்ந்து பேசிய தினேஷ் கார்த்திக், மற்ற பவுலர்கள் தடுமாறும் நிலையில் நீங்கள் மட்டும் எப்படி ஐந்து டெஸ்ட் போட்டிகளில் தொடர்ந்து விளையாடுகிறீர்கள். உங்களால் எப்படி முடிகிறது என்று கேள்வி கேட்டார்.
அதற்கு பதில் அளித்த சிராஜ், எனக்கு என்னுடைய நாடு மிகவும் பிடிக்கும். என் நாட்டுக்காக நான் கிரிக்கெட் விளையாடுகிறேன். அதற்காக விளையாடும் போது எனக்கு அனைத்தையும் கொடுக்க வேண்டும் என்று தான் தோன்றுமே தவிர, களத்தில் நாம் பந்து வீசும் போது காயமடைந்தால் என்ன ஆவது என்பது குறித்து எல்லாம் யோசிக்க மாட்டேன்.
என்னால் முடிந்தவரை விக்கெட்டுகள் எடுத்து என் நாட்டை வெற்றி பெற வைக்க முயற்சி செய்வேன் என்று முகமது சிராஜ் கூறினார். தற்போது நடைபெற்று வரும் ஆண்டர்சன் டென்டல்கர் தொடரில் முகமது சிராஜ் அதிக விக்கெட் வீழ்த்தி இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.