லண்டன்: இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான நான்காவது டெஸ்ட் போட்டி மான்செஸ்டர் நகரில் நாளை புதன் கிழமை தொடங்குகிறது. இந்த தொடர் தொடங்குவதற்கு முன்பே பும்ரா வெறும் மூன்று போட்டிகளில் தான் விளையாடுவார் என அறிவிக்கப்பட்டிருந்தது.
தற்போது பும்ரா இரண்டு போட்டிகளில் விளையாடிய நிலையில் மான்செஸ்டர் டெஸ்டில் அவர் விளையாடுவாரா? மாட்டாரா? என்று கேள்வி எழுந்தது. அது மட்டும் இல்லாமல் இந்திய அணியில் இருக்கும் ஆகாஷ் தீப், ஆர்ஸ்தீப் சிங் உள்ளிட்ட முக்கிய பவுலர்களுக்கு காயம் ஏற்பட்டது.

இதனால் இந்தியாவிற்கு நெருக்கடி ஏற்பட்டு இருக்கிறது. இந்த சூழலில் மான்செஸ்டர் நகரில் செய்தியாளர்களை சந்தித்த இந்திய வீரர் முகமது சிராஜ், பும்ரா நான்காவது டெஸ்ட் போட்டியில் கண்டிப்பாக விளையாடுவார் என அறிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், "பும்ரா நான்காவது டெஸ்ட்டில் விளையாடுவார்.
ஆகாஷ் தீப்புக்கு காயம் ஏற்பட்டிருக்கிறது."
"எனினும் அவர் பந்து வீசி இருக்கின்றார். அணியின் பிசியோ அவருடைய உடல் தகுதியை கண்காணிப்பார்கள். பவுலிங் காம்பினேஷனில் நிச்சயம் மாறுதல் இருக்கும். ஆனால் சரியான இடத்தில் பந்து வீசினால் விக்கெட்டுகள் கிடைக்கும். இதுதான் எங்களுடைய திட்டம். நான் தொடர்ந்து விளையாடுவதற்கு காரணம் கடவுள் எனக்கு நல்ல உடல் ஆரோக்கியத்தை கொடுத்திருக்கின்றார்."
"எனக்கு வாய்ப்பு கிடைக்கும்போதே அதை நான் சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என நினைக்கின்றேன். நல்ல உடல் தகுதியுடன் இருக்கும் போது எவ்வளவு போட்டிகள் நாட்டுக்காக விளையாட முடியுமோ அவ்வளவு போட்டிகள் பங்கேற்க வேண்டும் என்பதுதான் என்னுடைய ஆசை. இங்கிலாந்து அணியின் கேப்டன் ஸ்டோக்சை பார்த்தீர்கள் என்றால் அவர் தொடர்ந்து இரண்டு முறை 10 ஓவர்களை வீசி இருக்கின்றார்."
"அவருக்கு என்னுடைய பாராட்டுக்கள் நான் லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் 29 பந்துகளை எதிர் கொண்டேன். அப்போது எனக்கு நல்ல நம்பிக்கை இருந்தது. நிச்சயமாக நான் அவுட் ஆக மாட்டேன் என்று நினைத்தேன். ஒவ்வொரு பந்தும் பேட்டின் நடுவில் பட்டது. நான் ஆட்டம் இழக்காமல் இருந்தால் நிச்சயம் முடிவு வேறு மாதிரி இருக்கும்."
"லார்ட்ஸ் டெஸ்ட் போட்டிக்கு பின் நான் மிகவும் உணர்ச்சிவசப்பட்டேன். நிச்சயம் நாங்கள் இரண்டுக்கு ஒன்று என்ற கணக்கில் முன்னிலை பெற்று இருக்க முடியும். ஜடேஜாவும் அபாரமாக பேட்டிங் செய்தார்.ஆனால் லார்ட்ஸ் டெஸ்ட் முடிவடைந்த பிறகு நான் எனக்குள்ளே சொல்லிக் கொண்டது இது மட்டும்தான்."
"தொடர் இன்னும் முடிவடையவில்லை. என்னுடைய பேட்டிங்கிலும் நான் தற்போது கவனம் செலுத்தி வருகின்றேன். ஆஸ்திரேலியா தொடருக்கு பிறகு நான் வலை பயிற்சியில் பேட்டிங் செய்து வருகின்றேன். ஆனால் 22 ரன்கள் வித்தியாசத்தில் மூன்றாவது டெஸ்ட்டில் தோல்வியை தழுவியது எனக்கு மனவலியை தருகின்றது" என்று சிராஜ் கூறினார். தற்போது மூன்று டெஸ்ட் போட்டியில் விளையாடியுள்ள சிராஜ் நடப்பு தொடரில் 13 விக்கெட்டுகளை கைப்பற்றி இருக்கின்றார்.