மான்செஸ்டர்: இங்கிலாந்து அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் பந்துவீச்சு மிகவும் மோசமாக இருக்கிறது. இதன் காரணமாக இங்கிலாந்து அணி மான்செஸ்டர் டெஸ்ட் போட்டியில் ரன் குவிப்பில் ஈடுபட்டு வருகிறது.
இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 358 ரன்கள் எடுக்க இங்கிலாந்து அணி தற்போது ஏழு விக்கெட் இழப்பிற்கு 544 ரன்கள் எடுத்திருக்கிறது. இது இந்தியாவின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோரை விட186 ரன்கள் அதிகமாகும்.

இந்திய அணி பேட்டிங் செய்யும்போது ஆடுகளம் பந்துவீச்சுக்கு சாதகமாக இருப்பது போல் தெரிகிறது. ஆனால் இங்கிலாந்து பேட்டிங் செய்யும்போது மட்டும் அது எப்படி பேட்டிங் பிட்ச் போல் மாறுகிறது என்று ரசிகர்கள் புலம்பி வருகின்றனர். இதற்கு காரணம் இந்திய வீரர்கள் சரியாக பந்துவீசாததும், வானிலை மாற்றம் தான் என்றும் கிரிக்கெட் வல்லுநர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
எனினும் இதற்கு விளக்கம் அளித்துள்ள இந்திய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் மோர்னே மோர்க்கல், "இரண்டாவது நாள் ஆட்டத்தை ஒப்பிட்டு பார்த்தால் மூன்றாவது நாள் ஆட்டத்தில் நாங்கள் நல்ல முறையில் தான் பந்து வீசி இருக்கின்றோம். எங்களின் வீரர்கள் பெரிய அளவு ரன்களை கொடுக்கவில்லை."
"எனினும் இது போன்ற ஆடுகளத்தில் பந்து வீச அதித சக்தி தேவைப்படும். ஆனால் நாங்கள் யாரையும் உட்கார்ந்து எடை போடவில்லை.எங்கள் அணியின் ஸ்டார் பௌலர்களான பும்ரா மற்றும் சிராஜ் இருவருமே தங்களது கால்களை மடக்கி கொண்டார்கள். இதனால் அவர்களுக்கு வலி இருந்தது. எனினும் இருவருமே தற்போது நல்ல உடல் தகுதியுடன் தான் இருக்கின்றார்கள்."
"ஆனால் எங்களுக்கு ஆடுகளத்தில் துல்லியமாகவும், அதிகமாகவும் தொடர்ந்து பந்து வீசக்கூடிய வீரர் தேவை. அதனால்தான் நாங்கள் காம்போஜை தேர்வு செய்தோம். ஏற்கனவே அருகில் மூன்று வேகப்பந்து வீச்சாளர்கள் இருக்கும்போது, நான்காவதாக ஒருவர் கூடுதலாக பந்து வீச முடியாது."
"இதுதான் சர்துல் தாக்கூர் 5 ஓவருக்கு மேல் பந்து வீச முடியாமல் போனதற்கு ஒரு காரணமாக இருக்கும். மேலும் கில் வேகப்பந்துவீச்சாளர்களை வைத்து செயல்பட வேண்டும் என நினைத்ததால் வாஷிங்டன் சுந்தரை தாமதமாக பயன்படுத்திருக்கலாம். எங்கள் அணியின் பேட்டிங் பலத்தை அதிகரிக்கவே குல்தீப்பை அணியில் சேர்க்க முடியாத நிலை ஏற்பட்டது" என்று மோர்க்கல் கூறியுள்ளார்.