லண்டன்: 35 ஆண்டுகளாக இங்கிலாந்து மான்செஸ்டர் நகரில் உள்ள ஓல்டு டிரஃபோர்ட் மைதானத்தில் எந்த இந்திய வீரரும் சதமடிக்கவில்லை என்பது தெரிய வந்துள்ளது. கடைசியாக 1990ஆம் ஆண்டு நடந்த டெஸ்ட் போட்டியில் இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் சதம் அடித்திருக்கிறார்.
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 4வது டெஸ்ட் போட்டி நாளை ஓல்டு டிரஃபோர்ட் மைதானத்தில் தொடங்க உள்ளது. 5 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரில் 2-1 என்ற கணக்கில் இங்கிலாந்து அணி முன்னிலையில் உள்ள நிலையில், 4வது டெஸ்ட் போட்டியை இந்திய அணி வெற்றி பெற வேண்டும் அல்லது டிராவி செய்ய வேண்டும் என்ற கட்டாயத்தில் இருக்கிறது.
இந்த போட்டி நாளை மாலை 3.30 மணிக்கு தொடங்க உள்ளது. இதனால் இந்திய அணி மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பு உச்சத்தில் இருக்கிறது. இந்த நிலையில் மான்செஸ்டர் ஓல்டு டிரஃபோர்ட் மைதானம் இந்திய அணி ராசியே இல்லாத மைதானமாக பார்க்கப்படுகிறது. ஏனென்றால் 9 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி, ஒரு வெற்றியை கூட இந்திய அணி பெற்றதில்லை.

5 போட்டிகளை டிரா செய்துள்ள இந்திய அணி, 4 போட்டிகளில் தோல்வியை சந்தித்துள்ளது. இங்கிலாந்து பாரம்பரியமான மைதானங்களில் ஒன்றான இதில், இந்திய அணி முதல் வெற்றியைப் பெறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. அதேபோல் பர்மிங்ஹாம் மைதானத்தில் இந்திய அணி ஒரு போட்டியில் கூட வென்றதில்லை. அந்த சாதனையை சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி இந்த டெஸ்ட் தொடரில் படைத்தது.
இதனால் மீண்டும் இந்திய அணி சாதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஓல்டு டிரஃபோர்ட் மைதானத்தைப் பொறுத்தவரை நல்ல ஸ்விங் இருக்கும். கடந்த சில வாரங்களாக மான்செஸ்டரில் மழை பெய்து வருவதால், அதன் தாக்கம் போட்டியில் இருக்கும் என்று கருதப்படுகிறது. இந்த நிலையில் இந்திய சார்பாக ஆடிய வீரர்களில் கடைசியாக சச்சின் டெண்டுல்கர் இந்த மைதானத்தில் கடைசியாகச் சதம் அடித்துள்ளார்.
அதுவும் 1990ல் நடந்த போட்டியில் சச்சின் சதமடித்திருப்பது தெரிய வந்துள்ளது. இதன்பின் இந்திய அணிக்காக ஆடிய எந்த வீரர்களும் ஓல்டு டிரஃபோர்ட் மைதானத்தில் சதம் அடித்ததே இல்லை. சுமார் 35 ஆண்டுகளுக்கும் மேலாக இந்திய வீரர்களால் சதமடிக்க முடியவில்லை. இதனை இந்த டெஸ்ட் போட்டியில் இந்திய அணி பேட்ஸ்மேன்கள் மாற்றிக் காட்டுவார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்த டெஸ்ட் தொடரில் ஜெய்ஸ்வால், சுப்மன் கில், கேஎல் ராகுல், ரிஷப் பண்ட், ஜடேஜா ஆகிய 5 பேட்ஸ்மேன்களும் மிகச்சிறந்த ஃபார்மில் இருக்கின்றனர். இதனால் சச்சின் டெண்டுல்கருக்கு பின் சதமடிக்கப் போகும் வீரர் யார் என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. இந்த போட்டியில் சதமடித்து இந்திய அணி வென்றால், அது இன்னும் பல ஆண்டுகளுக்குப் பேசப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.