மும்பை: இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் நட்சத்திர வீரர் விராட் கோலிக்கு ரெஸ்ட் கொடுக்க வாய்ப்பில்லை என்று தெரிய வந்துள்ளது. இதனால் அடுத்த மாதம் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு முன் இந்திய அணி வீரர்கள் அனைவரும் இங்கிலாந்து ஒருநாள் தொடரில் விளையாட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலுயா அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி 3-1 என்ற கணக்கில் படுதோல்வியை சந்தித்துள்ளது. இதனால் இந்திய அணியின் சீனியர் வீரர்களான விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா இருவர் மீது கடுமையான விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டு வருகிறது. அதேபோல் ரோஹித் சர்மா உடனடியாக ஓய்வை அறிவிக்க வேண்டும் என்ற கோஷங்களும் எழுந்துள்ளன.

இதனைத் தொடர்ந்து இந்திய அணி வீரர்களின் கவனம் அடுத்ததாக சாம்பியன்ஸ் டிராபி தொடர் பக்கம் திரும்பியுள்ளது. அதற்கு முன்பாக வரும் 22ஆம் தேதி முதல் இங்கிலாந்து அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும், பிப்.6 முதல் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும் இந்திய அணி விளையாடவுள்ளது. இதனிடையே இங்கிலாந்து ஒருநாள் தொடரில் சீனியர் வீரர்களுக்கு ஓய்வு அளிக்க உள்ளதாக கூறப்பட்டது.
ஆனால் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அடைந்த தோல்வியால், பிசிசிஐ நிர்வாகிகள் ரிஸ்க் எடுக்க வேண்டும் என்று முடிவு செய்துள்ளதாக தெரிய வந்துள்ளது. நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரிட் பும்ராவை தவிர சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய அணியில் விளையாடவுள்ள அத்தனை வீரர்களும் இங்கிலாந்து ஒருநாள் தொடரில் விளையாட வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதனை சீனியர் வீரர்களான ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோரிடமும் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. கடைசியாக இந்திய அணி இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் பங்கேற்றது. அதில் 2-0 என்ற கணக்கில் இந்திய அணி வரலாற்று தோல்வியை தழுவிய நிலையில், சாம்பியன்ஸ் டிராபி தொடரில் சிறப்பாக செயல்படுமா என்ற சந்தேகம் அதிகரித்துள்ளது.
அதேபோல் விஜய் ஹசாரே தொடரில் சிறப்பாக ஆடி வரும் ஸ்ரேயாஸ் ஐயர் இந்திய அணிக்கு திரும்பவுள்ளதாகவும் தகவல் கிடைத்துள்ளது. அதுமட்டுமல்லாமல் டாப் ஆர்டரில் சுப்மன் கில் தொடக்க வீரராக விளையாடி வந்தார். ஆனால் கம்பீர் தொடக்க வீரர்கள் கூட்டணி இடதுகை - வலதுகை பேட்ஸ்மேன்களாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்.
இதனால் சுப்மன் கில் இடத்தில் இடதுகை நட்சத்திர பேட்ஸ்மேனான யஷஸ்வி ஜெய்ஸ்வாலை கொண்டு வர இந்திய அணி நிர்வாகம் முடிவு செய்துள்ளதாகவும் தெரிய வந்துள்ளது. இதனால் டி20 கிரிக்கெட்டை தொடர்ந்து சுப்மன் கில் ஒருநாள் அணியிலும் பெஞ்ச் செய்யப்படுவார் என்று விவாதங்கள் எழுந்துள்ளன.