மும்பை: இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டனாக ரோஹித் சர்மா தொடர்ந்து செயல்படுவார் எனத் தகவல் வெளியாகி உள்ளது. முன்னதாக ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ரோஹித் தலைமையில் இந்திய அணி 1 - 3 என தோல்வி அடைந்து இருந்தது. அதில் கிடைத்த ஒரு வெற்றியும் பும்ரா தலைமையில் ஆடிய போது தான் கிடைத்தது.
அதற்கு முன்பு நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் ரோஹித் தலைமையில் ஆடிய இந்திய அணி அனைத்து போட்டிகளிலும் தோல்வி அடைந்து இருந்தது. ரோஹித் சர்மா தலைமையில் இந்திய அணியை ஆடிய கடைசி ஆறு போட்டிகளில் ஐந்து தோல்விகள் மற்றும் ஒரு டிரா மட்டுமே முடிவாக கிடைத்திருக்கிறது.

அவரது பேட்டிங் ஃபார்மும் டெஸ்ட் போட்டிகளில் மிக மோசமாக இருக்கிறது. ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரின் கடைசி போட்டியில் இருந்து தன்னை தானே அவர் நீக்க வேண்டிய நிலையம் ஏற்பட்டது. இந்த நிலையில், ரோஹித் சர்மா 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய அணியில் தேர்வு செய்யப்படுவாரா? என்ற சந்தேகம் இருந்தது.
சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு முன்னதாக இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடர் நடைபெற உள்ளது. அந்தத் தொடரில் ரோஹித் சர்மா இடம் பெறுவாரா? என்ற கேள்வியும் இருந்தது. தற்போது பிசிசிஐ வட்டாரத்தில் இருந்து அது குறித்த தகவல் கிடைத்து இருக்கிறது.
ரோஹித் சர்மா உறுதியாக இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரிலும், அதைத் தொடர்ந்து 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரிலும் கேப்டனாக இந்திய அணியை வழிநடத்துவார். அதுவரை அவரது இடம் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது என பிசிசிஐ வட்டாரத்தில் கூறப்பட்டு இருக்கிறது.
2023 ஒருநாள் போட்டி உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியை இறுதிப்போட்டி வரை ரோஹித் சர்மா வழி நடத்தி சென்றதன் காரணமாகவே இந்த முடிவை பிசிசிஐ எடுத்து இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும், அந்த தொடரில் அவர் 11 இன்னிங்ஸில் 597 ரன்கள் குவித்து இருந்தார். அப்போது அவரது பேட்டிங் சராசரி 54.27 என்பதாகவும், ஸ்டிரைக் ரேட் 125.95 என்பதாகவும் இருந்தது.
இடையே 2024 டி20 உலகக்கோப்பையையும் கேப்டனாக வென்று கொடுத்தார். டெஸ்ட் போட்டிகளில் அவர் சரியாக விளையாடவில்லை என்பதை மட்டுமே வைத்து அவரை அணியில் இருந்து நீக்க முடியாது என்ற முடிவை பிசிசிஐ நிர்வாகம் எடுத்திருப்பதாக கூறப்படுகிறது.
ரோஹித் சர்மா டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே அவர் இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் பங்கேற்க மாட்டார்.