முல்தான்: இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணி இரண்டுக்கு இரண்டு என்ற கணக்கில் தொடரை சமன் செய்தது. இந்த டெஸ்ட் தொடரில் 5 போட்டிகளிலும் விளையாடிய சிராஜ், மொத்தமாக 185 ஓவர் வீசி 23 விக்கெட்டுகளை கைப்பற்றி இருக்கிறார்.
குறிப்பாக கடைசி டெஸ்டில் சிராஜ் அபாரமாக பந்து வீசி 9 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்தியாவில் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தார். இந்த தருணத்தில் சிராஜ் பந்தை சேதப்படுத்தியதாக பல பாகிஸ்தான் முன்னாள் வீரர்கள் கடுமையாக விமர்சித்து இருந்தது.

இந்த நிலையில், அந்த நாட்டின் முன்னணி வேகப்பந்துவீச்சாளரான வசீம் அக்ரம் பாராட்டி இருக்கிறார். இது குறித்து பேசிய அவர், "சிராஜுக்கு அணியை வெற்றி பெற வைக்க வேண்டும் என்ற உத்வேகமும் வெற்றி வேட்கையும் இருந்தது. அவருடைய பங்களிப்பு வியக்கத்தக்கது. 5 டெஸ்ட் போட்டிகளிலும் சேர்த்து 185 ஓவர்களை வீசி இருக்கிறார் என்றால் அது சாதாரணமான விஷயம் கிடையாது."
"அதுவும் கடைசி நாளில் அவர் வீசிய விதம் அவருடைய உடல் தகுதியையும் மன பலத்தையும் காட்டி இருக்கிறது. இனி சிராஜ் ஒரு துணை பவுலர் கிடையாது. சிராஜ், பும்ரா இல்லாமல் அணியை தலைமை தாங்கி விளையாடி இருக்கின்றார். தனது இதயத்தில் இருந்து அவர் செயல்பட்டு இருக்கிறார்."
"ஹாரி புரூக்கின் கேட்சை அவர் கோட்டை விட்ட பின்னும் சிராஜ் தன்னுடைய கவனத்தை விடவில்லை. இது ஒரு போர் வீரருக்கான குணமாகும். சிராஜின் இந்த பந்துவீச்சு பார்க்கும்போது டெஸ்ட் கிரிக்கெட் இன்னும் சிறப்பாகவே இருக்கிறது என நினைக்கத் தோன்றுகிறது."
"தற்போது எல்லாம் நான் கிரிக்கெட்டை அவ்வளவுவாக பார்ப்பதில்லை. ஏனென்றால் நான் வேறு பணியில் இருக்கின்றேன். ஆனால் ஐந்தாவது நாளை பார்க்க அப்படியே உட்கார்ந்து விட்டேன். ஐந்தாவது நாளில் இந்தியாவின் வெற்றிக்கு நான் 60% தான் வாய்ப்பு இருக்கிறது என்று கூறியிருந்தேன். ஆனால் சிராஜ் ஜெயித்து காட்டிவிட்டார்."
"உண்மையிலே பும்ரா போல ஒரு சிறந்த பவுலரை ஓய்வு வழங்க தைரியம் வேண்டும். இந்தியாவிடம் அது இருக்கின்றது. இந்தியாவிடம் திறமை வாய்ந்த கூடுதல் வீரர்கள் இருக்கின்றார்கள். அவர்களுடைய திட்டம் சிறப்பாகவே பலித்திருக்கின்றது. ஆசிய கோப்பை மற்றும் டி20 உலக கோப்பை தொடர் அடுத்தடுத்து வருகிறது. இதில் பும்ராவின் பங்கு மிகவும் முக்கியம் என நான் கருதுகிறேன்" என வசிம் அக்ரம் தெரிவித்துள்ளார்.