மும்பை: இங்கிலாந்து அணிக்கு எதிரான 2வது டெஸ்டில் இரட்டை சதம் விளாசிய ஜெய்ஸ்வால் மற்றும் சச்சின் டெண்டுல்கர் இருவரையும் ஒப்பிட்டு முன்னாள் வீரர் பார்த்தீவ் படேல் கூறியுள்ள கருத்து சர்ச்சையாகியுள்ளது.
இங்கிலாந்து அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் இந்திய தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் இரட்டை சதம் விளாசி அசத்தினார். இந்திய அணியின் மற்ற 10 பேட்ஸ்மேன்கள் இணைந்து 187 ரன்கள் மட்டும் சேர்த்த நிலையில், யஷஸ்வி ஜெய்ஸ்வால் மட்டும் 209 ரன்களை விளாசினார். அதுமட்டுமல்லாமல் இந்திய அணிக்காக இரட்டை சதம் விளாசிய 4வது இடதுகை பேட்ஸ்மேன் என்ற சாதனையை படைத்தார்.

அதேபோல் கடந்த 20 ஆண்டுகளில் குறைந்த வயதில் இரட்டை சதம் விளாசிய வீரர்கள் பட்டியலில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் பிராத்வெய்ட்-க்கு பின் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 2வது இடத்தில் உள்ளார். இதன் மூலம் இந்திய அணி நிரந்தர தொடக்க வீரர் என்ற உயரத்திற்கு யஷஸ்வி ஜெய்ஸ்வால் முன்னேறியுள்ளார். 6 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 2 சதங்கள், 2 அரைசதங்களை விளாசியுள்ள ஜெய்ஸ்வால் பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார்.
இதுகுறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் பார்த்தீவ் படேல் பேசுகையில், வான்கடே மைதானத்தில் வெளிச்சத்திற்கு கீழ் ரசிகர்களின் பாராட்டை பெற வேண்டும் என்று ஜெய்ஸ்வால் விரும்பினார். ஐபிஎல் தொடரின் போது சதம் விளாசி அந்த ஆசையை நிறைவேற்றி கொண்டார். ஆனால் டெஸ்ட் கிரிக்கெட் கொஞ்சம் வேறு மாதிரியான ஆட்டம். அவர் ஏற்கனவே சதம் விளாசி இருந்தாலும், இரட்டை சதத்தை அதிகமாக அடிக்க முடியாது.
ஜாம்பவான் கிரிக்கெட்டரான சச்சின் டெண்டுல்கருக்கே டெஸ்ட் கிரிக்கெட்டில் இரட்டை சதம் விளாச வெகு காலம் ஆனது. ஆனால் யஷஸ்வி ஜெய்ஸ்வால் அவரது கேரியரின் தொடக்க காலத்திலேயே தனது முதல் இரட்டை சதத்தை விளாசியுள்ளார் என்று கூறியுள்ளார். பார்த்தீவ் படேலின் இந்த கருத்து ரசிகர்களிடையே சர்ச்சையாகியுள்ளது.
டெஸ்ட் கிரிக்கெட்டில் இதுவரை 6 இரட்டை சதங்களை சச்சின் டெண்டுல்கர் விளாசியுள்ளார். கிரிக்கெட்டின் கடவுள் என்று கொண்டாடப்படும் சச்சினை யஷஸ்வி ஜெய்ஸ்வாலுடன் ஒப்பிடுவதில் எந்த தவறும் இல்லை. ஆனால் டெஸ்ட் கிரிக்கெட்டில் இரட்டை சதம் அடிக்க சச்சின் அதிக ஆண்டுகள் எடுத்து கொண்டார் என்று சொல்வது தேவையில்லாத கருத்து என்று ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.