R Ashwin : விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தமிழக கிரிக்கெட் வீரர் அஸ்வின் 500 விக்கெட்டுகளை கைப்பற்றி வரலாற்று சாதனை படைப்பார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால், அதற்கான நேரம் இன்னும் கைக் கூடி வரவில்லை.
முதல் டெஸ்டில் இங்கிலாந்து வென்ற நிலையில், இரண்டாவது டெஸ்டில் அதற்கு இந்திய அணி 106 ரன்கள் வித்தியாசத்தில் வென்று நல்ல பதிலடி கொடுத்தது. 399 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கில் கடைசி இன்னிங்சில் இங்கிலாந்து அணி களமிறங்கி விளையாடியது. இதில் முதல் விக்கெட்டுக்கு இங்கிலாந்து அணி 50 ரன்கள் சேர்த்து நல்ல தொடக்கத்தை அளித்தது. அப்போது அஸ்வின் 3ஆம் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து வீரர் பென் டக்கட் விக்கெட்டை வீழ்த்தி இந்தியாவின் விக்கெட் வேட்டையை தொடங்கினார்.

இதனையடுத்து, 4வது நாள் ஆட்டம் தொடக்கத்தில் 500 விக்கெட்டுகளை தொட இன்னும் 3 விக்கெட்டுகள் தேவைப்பட்டது. அப்போது, அபாரமாக விளையாடி வந்த ஆலி போப்பின் விக்கெட்டை அஸ்வின், ரோகித்தின் அபார கேட்ச்சால் கைப்பற்றினார்.
இதே போன்று இங்கிலாந்து அணியின் நட்சத்திர வீரரான ஜோ ரூட்டின் விக்கெட்டை அஸ்வின் கைப்பற்ற, இங்கிலாந்து தடுமாற்றத்தை சந்தித்தது. அதன் பிறகு அஸ்வின் தன்னுடைய 500வது விக்கெட்டை கைப்பற்ற கடுமையாக போராடினார். ஒரு கட்டத்தில் அஸ்வின் பந்தில் டாம் ஹார்ட்லி ஆட்டமிழக்க, 500வது விக்கெட் கிடைத்துவிட்டது என்று ரசிகர்கள் நம்பினர். ஆனால் டிஆர்எஸ் முடிவில் அது அவுட் இல்லை என தெரியவந்தது.
இந்தியாவின் வெற்றிக்கு கடைசி ஒரு விக்கெட் தேவைப்பட்ட போது கூட, அஸ்வினுக்கு ரோகித் ஓவர் கொடுத்தார். ஆனால், அந்த ஓவரில் ஒரு விக்கெட் தேவைப்பட்டது. ஆனால், அந்த ஓவரில் 6 ரன்கள் செல்ல, அடுத்த ஓவரிலேயே பும்ரா கடைசி விக்கெட்டை எடுத்து அஸ்வின் கனவுக்கு ஆப்பு வைத்தார். இதன் மூலம் அஸ்வின் 499 விக்கெட்டிலேயே இருக்கிறார்.
இனி அடுத்த டெஸ்ட் போட்டி வரும் 15ஆம் தேதி தான் தொடங்குகிறது. அதில் ஒரு விக்கெட்டை எடுத்தாலும், 500 விக்கெட்டை அதிவேகமாக வீழ்த்திய 2வது வீரர் என்ற சாதனை அஸ்வினுக்கு கிடைக்கும். இந்தியாவை பொறுத்தவரை கும்ப்ளே தான் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார். அஸ்வின் 97 போட்டிகளில் விளையாடி 499 விக்கெட்டுகளை எடுத்திருக்கிறார். இதன் மூலம் அடுத்த டெஸ்டில் அஸ்வின் விக்கெட் எடுத்தால், முரளிதரனுக்கு பிறகு அதிவேகமாக 500 விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் என்ற சாதனையை அஸ்வின் பெறுவார். இதற்கு முன்னால் இலங்கை அணியின் முரளிதரன் 87 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி கடந்த 2004 ஆம் ஆண்டு 500 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
தற்போது இரண்டாவது இடத்தில் அணில் கும்ப்ளே 105 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய போது கடந்த 2006 ஆம் ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட்டில் 500 விக்கெட்டை கைப்பற்றினார். மூன்றாவது இடத்தில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் ஜாம்பவான் வார்னே 108 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 2004 ஆம் ஆண்டு 500 விக்கெட்டை எடுத்திருந்தார். இதுவரை டெஸ்ட் கிரிக்கெட்டில் முரளிதரன், அனில் கும்ப்ளே, வார்னே மெக்ராத், நாதன் லயான் போன்ற வீரர்கள் தான் 500 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார்கள்.