ஐதராபாத் : பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இங்கிலாந்து, இந்திய அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி ஹைதராபாத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 246 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
அஸ்வின், ஜடேஜா ஆகியோர் தலா மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதனை அடுத்து இந்திய அணி முதலில் விளையாடியது. இதில் ஜெய்ஸ்வால் ஆட்டமிழக்காமல் 76 ரன்கள் எடுத்திருக்க முதல் நாள் ஆட்டநேரம் முடிவில் இந்திய அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 119 ரன்கள் எடுத்துள்ளது.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள தமிழக கிரிக்கெட் வீரர் அஸ்வின் இன்றைய நாள் ஆட்டம் மிகவும் சுவாரசியமாக அமைந்தது என்று கூறியுள்ளார். இது குறித்து பேசிய அவர், இன்றைய நாள் ஆட்டம் தொடங்கிய போது ஆடுகளத்தில் கொஞ்சம் ஈரப்பதம் இருந்தது. இதனால் பந்து வேகமாக பேட்ஸ்மேன்களை நோக்கி செல்லவில்லை.
ஒரு கட்டத்திற்கு மேல் ஆடுகளம் கொஞ்சம் தோய்வாக ஆனது. அதன் பிறகு தான் பந்து சுழற் பந்துவீச்சிக்கு சாதகமாக இருந்தது. எனினும் எங்களுக்கு தேவையான வேகம் ஆடுகளம் கொடுக்கவில்லை. இதனால் பேட்டில் பட்டாலும் ஸ்லிப் பில்டர்களிடம் பந்து பறந்து செல்லவில்லை. இதனால் எங்களுடைய வேகத்தை நாங்கள் கலந்து மாற்றி வீசினோம்.
என்னைப் பொறுத்தவரை இங்கிலாந்து அடித்திருக்கும் 240 (246) ரன்கள் என்பது ஒரு சவாலான இலக்கு தான் என்று நான் கருதுகிறேன்.
நாங்கள் எதிர்பார்த்ததை விட ஒரு 30 40 ரன்கள் கூடுதலாக இங்கிலாந்து அடித்து விட்டார்கள். எனினும் ஜெய்ஸ்வாலும், ரோகித் சர்மாவும் எங்களுக்கு நல்ல ஒரு தொடக்கத்தை அளித்திருக்கிறார்கள். இது மூலம் எங்களுக்கான பாதை கொஞ்சம் எளிதாக மாறி இருக்கிறது. நாளைய ஆட்டத்தில் மட்டும் யாராவது ஒருவர் நின்று சதம் அடித்து விட்டால் எங்களுக்கு சாதகமாக போட்டி மாறிவிடும்.
விளையாட்டில் ஒரு நல்ல விஷயமே அதுதான். யாராவது திடீரென்று சிறப்பாக செயல்பட்டு உடைத்து வெளியே வருவார்கள். ஜெய்ஷ்வால் ஐபிஎல் தொடரில் நன்றாக விளையாடி இருந்தார். தற்போது டெஸ்ட் கிரிக்கெட்டிலும் அவருக்கு நல்ல தொடக்கம் கிடைத்திருக்கிறது. எதையும் நினைத்து கவலைப்படாமல் களத்தில் விளையாடுவதன் மூலம் அவர் தைரியமாக பல சாட்களை ஆடுகிறார்.
அவருடைய ஆட்டத்தை பார்க்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது. சில சமயம் அவர் விளையாடுவதை பார்க்கும் போது ரிஷப் பன்ட் விளையாடுவது போல் இருக்கிறது. ரிஷப் பண்ட் போல பல சாட்களை ஆடுகிறார். அவரைப் போலவே பயம் இன்றி களத்தில் நிற்கிறார் என்று அஸ்வின் பாராட்டியுள்ளார் .