தரம்சாலா : இந்திய அணியின் இளம் வீரர் ரஜத் பட்டிதருக்கு இன்னும் கொஞ்சம் வாய்ப்பும், நேரமும் அளிக்க வேண்டும் என்று கேப்டன் ரோகித் சர்மா தெரிவித்துள்ளார்.
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5வது டெஸ்ட் போட்டி நாளை தரம்சாலா மைதானத்தில் நடக்கவுள்ளது. ஏற்கனவே இந்திய அணி டெஸ்ட் தொடரை வென்றிருந்தாலும், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேற அதிக போட்டிகளில் வெற்றிபெற வேண்டிய கட்டாயம் உள்ளது. அதுமட்டுமல்லாமல் இந்திய அணியின் ரவிச்சந்திரன் அஸ்வின் தனது 100வது போட்டியில் களமிறங்கவுள்ளார்.

இந்த நிலையில் போட்டிக்கு முன்பாக செய்தியாளர்களை சந்தித்து இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா பேசுகையில், 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவது சாதாரண வீரர் கிடையாது. இந்திய அணியின் முக்கியமான மேட்ச் வின்னர்களில் அஸ்வினும் ஒருவர். அவரின் பங்களிப்பிற்கு எவ்வளவு பாராட்டினாலும் போதாது. கடந்த 5 முதல் 7 ஆண்டுகளில் அஸ்வினின் வளர்ச்சி அபாரமானது.
பேட்டிங், பவுலிங் என்று ஆல் ரவுண்டராக ரவிச்சந்திரன் அஸ்வின் அதிக பங்களிப்பை வழங்கியுள்ளார். இவரை போன்ற வீரர்கள் கிடைப்பது எளிதல்ல என்று தெரிவித்தார். தொடர்ந்து இந்திய அணியின் பிளேயிங் லெவன் பற்றிய கேள்விக்கு, ரஜத் பட்டிதர் நிச்சயம் மிகச்சிறந்த வீரர். அவரிடம் நல்ல திறமை உள்ளது. அவரின் அணுகுமுறையும் ஆட்டமும் என்னை கவர்ந்துள்ளது.
அதனால் திறமையான வீரராக பார்க்கிறேன். அவருக்கு இன்னும் கொஞ்சம் நேரம் கொடுக்க வேண்டும் என்று நினைக்கிறேன். இந்த டெஸ்ட் தொடர் இந்திய அணிக்கு ஏராளமான கம்பேக் போட்டியாகவே அமைந்துள்ளது. எப்போதெல்லாம் இந்திய அணி மீது பிரஷர் போடப்படுகிறதோ, அப்போதெல்லாம் எதிரணி மீது பிரஷரை எங்களால் திருப்ப முடிகிறது என்று தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்து அணிக்கு எதிரான 3 போட்டிகளில் விளையாடியுள்ள ரஜத் பட்டிதர் மொத்தமாக 63 ரன்களை மட்டுமே சேர்த்துள்ளார். இதனால் கடைசி போட்டியில் ரஜத் பட்டிதருக்கு பதிலாக இளம் வீரர் தேவ்தத் படிக்கல் தேர்வு செய்யப்படுவார் என்று பார்க்கப்பட்டது. ஆனால் ரோகித் சர்மாவின் பேட்டியின் மூலமாக ரஜத் பட்டிதருக்கு மீண்டும் பிளேயிங் லெவனில் இடம் கிடைக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.