எத்தனை வருஷ கனவு.. மிரட்டல் சதத்தை விளாசிய ஆர்சிபி வீரர்.. இங்கிலாந்து அணியை பொளந்த ரஜத் பட்டிதர்!
அகமதாபாத்: இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிரான பயிற்சி போட்டியில் இந்திய ஏ அணிக்காக ஆடிய இளம் வீரர் ரஜத் பட்டிதர் சதம் விளாசி அசத்தியுள்ளார்.
16 ஆண்டுகளாக ஐபிஎல் கோப்பையை வெல்ல முடியாத அணியென்றால் அது ஆர்சிபி அணி தான். அதற்கு அந்த அணியின் நிர்வாகமும், பயிற்சியாளர்களுமே காரணம். ஒவ்வொரு முறையும் ஐபிஎல் ஏலத்தில் களமிறங்கும் போது ஸ்டார் வீரர்களை நோக்கியே பணத்தை வாரி இரைப்பார்கள். ஆனால் இந்திய இளம் வீரர்களையும், இந்திய வீரர்களையோ வாங்க முயற்சிக்க மாட்டார்கள்.

இன்று வரை விராட் கோலி மட்டுமே ஒரேயொரு இந்திய பேட்ஸ்மேனாக இருந்து வருகிறார். விராட் கோலிக்கு பின் இந்திய பேட்ஸ்மேன் என்றால் அது தினேஷ் கார்த்திக் மட்டும் தான். ஆனால் கடந்த 3 ஆண்டுகளில் ஆர்சிபி செய்த நல்ல விஷயம் என்னவென்றால் ரஜத் பட்டிதாரை விடுவிக்காமல் காத்து வந்தது தான்.
இந்திய இளம் வீரர்களில் ரஜத் பட்டிதர் நிச்சயம் அடுத்த சூப்பர் ஸ்டார் வீரராக இருக்க அதிக வாய்ப்புகள் உள்ளது. ஏற்கனவே தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் ரஜத் பட்டிதர் இந்திய அணிக்காக அறிமுகமானார். தற்போது இந்திய ஏ அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் ஆடி வரும் ரஜத் பட்டிதர், இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிரான பயிற்சி போட்டியில் களமிறங்கினார்.
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இங்கிலாந்து லயன்ஸ் அணி 233 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியது. இதன்பின் களமிறங்கிய இந்திய அணிக்கு அபிமன்யூ ஈஸ்வரன் - ரஜத் பட்டிதர் கூட்டணி தொடக்கம் கொடுத்தது. இதில் கேப்டன் அபிமன்யூ ஈஸ்வரன் 32 ரன்களில் ஆட்டமிழக்க, மறுமுனையில் நின்ற ரஜத் பட்டிதர் அதிரடியாக பவுண்டரிகளை விளாசி அசத்தினார்.
சிறப்பாக ஆடிய ரஜத் பட்டிதர் 141 பந்துகளில் ஒரு சிக்ஸ், 18 பவுண்டரி உட்பட 111 ரன்களை விளாசியுள்ளார். இவரது ஆட்டத்தை ஆர்சிபி அணி ரசிகர்கள் பலரும் பாராட்டி வருகின்றனர். அதேபோல் விராட் கோலிக்கு பின் ஆர்சிபி அணியின் சூப்பர் ஸ்டார் வீரராக ரஜத் பட்டிதர் உருவாகுவார் என்றும் நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர்.
Story first published: Saturday, January 13, 2024, 15:07 [IST]
Other articles published on Jan 13, 2024


Click it and Unblock the Notifications