மான்செஸ்டர்: இங்கிலாந்துக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டத்தில் இந்திய வேகப்பந்து வீச்சாளர்களின் செயல்பாடு மிகவும் மோசமாக இருந்ததாக இந்திய அணியின் முன்னாள் தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கடுமையாக சாடியுள்ளார். மேலும், அணியின் தற்போதைய தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் மற்றும் பந்துவீச்சு பயிற்சியாளர் மோர்னே மோர்கல் ஆகியோர் பந்துவீச்சாளர்களிடம் கடுமையான வார்த்தைகளை பயன்படுத்துவார்கள் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
மான்செஸ்டரில் நடைபெற்று வரும் இந்த முக்கியமான டெஸ்ட் போட்டியில், இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 358 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதையடுத்து பேட்டிங் செய்த இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான ஜாக் கிராலி மற்றும் பென் டக்கெட் ஆகியோர் இந்திய பந்துவீச்சை எளிதாக எதிர்கொண்டு ரன் குவித்தனர். குறிப்பாக, இரண்டாம் நாள் ஆட்டத்தின் தேநீர் இடைவேளையின் போது இங்கிலாந்து அணி விக்கெட் இழப்பின்றி 77 ரன்கள் எடுத்திருந்தது.

இந்த நிலையில், வர்ணனையில் ஈடுபட்டிருந்த ரவி சாஸ்திரி, இந்திய வேகப்பந்து வீச்சாளர்களான ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ் மற்றும் அறிமுக வீரர் அன்ஷுல் கம்போஜ் ஆகியோரின் பந்துவீச்சை கடுமையாக விமர்சித்தார். அவர் கூறுகையில், "இந்திய பந்துவீச்சாளர்களிடம் ஒரு சீரான தன்மை இல்லை. இந்த ஆட்டத்தை அவர்கள் திரும்பிப் பார்க்கும்போது, சில பவுண்டரிகள் அடிக்கப்பட்ட விதம் மிகவும் சாதாரணமாக, சில சமயங்களில் குப்பையாக இருந்தது என்பதை உணர்வார்கள்" என்று குறிப்பிட்டார்.
மேலும், "ஒரு பயிற்சியாளராக இருந்திருந்தால், இதே வார்த்தைகளை பயன்படுத்துவீர்களா?" என்று உடன் வர்ணனை செய்தவர் கேட்டதற்கு, "நிச்சயமாக, இன்னும் சொல்லப்போனால், வீரர்களின் உள்ளூர் மொழியில் இன்னும் கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தியிருப்பேன். பயிற்சியாளர் மற்றும் பந்துவீச்சு பயிற்சியாளர் கடுமையான வார்த்தைகளை பரிமாறிக் கொள்வார்கள். அப்படித்தான் அவர் விஷயங்களை வெளிப்படுத்துகிறார். அது வித்தியாசமானது" என்று கம்பீரின் அணுகுமுறையை குறிப்பிட்டார்.
இந்திய அணியின் பந்துவீச்சாளர்கள் சரியான லென்த்தில் பந்துவீசத் தவறியதும், இங்கிலாந்து பேட்ஸ்மேன்களுக்கு எளிதாக ரன்களை விட்டுக்கொடுத்ததும் ரவி சாஸ்திரியின் இந்த கோபத்திற்கு முக்கிய காரணமாக அமைந்தது. இந்திய அணி இந்த தொடரில் 2-1 என்ற கணக்கில் பின்தங்கியுள்ள நிலையில், இந்த போட்டியில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.